திமுக பொதுச்செயலாளராவாரா கருணாநிதி மெச்சிய 'தகத்தகாய சூரியன்' ஆ. ராசா?
சென்னை: திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார் என்கிற விவாதத்தில் தற்போதைய கொள்கை பரப்பு செயலாளரான ஆதி திராவிடரான ஆ. ராசாவின் பெயரை திராவிடர் இயக்கத்தினர் அதிகம் முன்மொழிந்து வருகின்றனர்.
திமுகவில் 40 ஆண்டுகாலம் பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் அன்பழகனார் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவர் முதுமையின் இறுதி தருவாயில் இருக்கும் போதே புதிய பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும்? என்கிற விவாதம் திமுகவில் களைகட்டியது.
துரைமுருகன், டிஆர் பாலு
திமுகவில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில் துரைமுருகனுக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் இந்த போட்டா போட்டி நிலவுவது இயற்கையானது. ஆனால் நடிகர் பாக்யராஜ் தொடங்கிய கட்சி என்று நம்பி அதற்கு மாவட்ட செயலாளராக இருந்த எ.வ.வேலுவின் பெயரை எல்லாம் கூட திமுக என்கிற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியில் வரிசைப்படுத்தியிருந்ததுதான் ஆச்சரியமானதாக இருந்தது.
பொருளாளருக்கு ஓகே
பொதுச்செயலாளர் பதவி துரைமுருகனுக்கு கொடுத்தால் காலியாகும் பொருளாளர் பதவிக்கான போட்டியில் எ.வ.வேலுவின் பெயர் இடம்பெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் எ.வ.வேலு உருவாக்கி வைத்திருக்கும் கிச்சன் லாபிகளின் லட்சணம் அது. அது ஒருபக்கம் இருக்கட்டும். திமுகவின் பொதுச்செயலாளராக ஆதி திராவிடரான ஆ. ராசாவை ஏன் நியமிக்கக் கூடாது என்பதுதான் வலுத்து வரும் விவாதம்.
ஆ.ராசாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு
சமூக நீதியை மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் திமுகவின் உயர் பதவிகளில் ஒன்றில் ஏன் ஆதி திராவிடரான ஆ. ராசாவை நியமிக்கக் கூடாது? திராவிடர் பேரியக்கத்தின் கொள்கைகளில் ஆழ்ந்த சிந்தனையும் புலமையும் பெற்றவர் ஆ. ராசா. இந்த பதவியில் 40 ஆண்டுகாலம் பேராசிரியர் அன்பழகனார் எப்படி கொள்கை உரத்தோடு இருந்தாரே அதே போல் திடமான கொள்கையோடு சர்வபரி தியாகத்துக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக் கூடிய கழகமே தம் உயிர் மூச்சு கொள்கையே உயிர் மூச்சு வாழ்கிறவர் ஆ. ராசா.
கருணாநிதியின் தகத்தகாய சூரியன்
ஆதி திராவிடரான ஆ. ராசா, மத்திய அமைச்சராக உச்சம் தொட்டதைப் பொறுக்காத வருணவாதிகள், மனுவாதிகள் கூட்டம்தான் இல்லாத புனைவாக ஸ்பெக்ட்ரம் பழியை அவர் மீது சுமத்தியது. ஆனால் கொள்கை மறவராய் அதை காராக்கிரகத்திலேயே அமர்ந்து எதிர்கொண்டு தாமே நீதிமன்றத்தில் வாதாடி நீதியை நிலைநாட்டியவர் ஆ.ராசா. அதனால்தான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, ஆ.ராசா சிறை மீண்ட போது தகத்தகாய சூரியன் என புகழாரம் சூட்டினார்.
அறிவுக் காவலர் பதவி
அத்தகைய கொள்கை பரப்பு செயலாளரான ஆ. ராசாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உயர்வான மரியாதை அளிக்கும் வகையில் பொதுச்செயலாளர் பதவியை தரப் போகிறாரா? அல்லது கொள்கை கோட்பாடு எதுக்கு? தங்க தமிழ்ச்செல்வன் ரேஞ்சுக்கு ஆ. ராசா இருக்கட்டும் என ஒதுக்கி வைக்கப் போகிறாரா? திமுகவின் வர்ண எதிரியான பாஜக கூட பலிபீடத்தில் ஒரு தலித்தை நிறுத்திவிட்டு மார்தட்டுகிறது; இந்நிலையில் ஆதி திராவிடரை திராவிடர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் பதவி எனும் அறிவுக் காவல் இடத்துக்கு நியமித்து தமது கொள்கை வலிமையை பறைசாற்றப் போகிறாரா ஸ்டாலின் என்பது மார்ச் 29-ல் கூடும் திமுக பொதுக்குழுவில் தெரிந்துவிடும்.