சம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா
Recommended Video
டெல்லி: பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்பந்தமேயில்லாமல் புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிலையில் தற்போது வரி விதிப்புக்கு கனகச்சிதமாக திருக்குறளை நீலகிரி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா சுட்டிக் காட்டியுள்ளார்.
2019- 2020-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் கொண்டு வரப்படும் சூட்கேஸுக்கு பதிலாக நிர்மலா துணிப்பையில் பட்ஜெட் உரை கொண்டு வந்ததால் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மேலும் பட்ஜெட் உரையை வாசித்த போது புறநானூற்றில் உள்ள யானை புக்க புலம் போல என தொடங்கும் பாடலை மேற்கோள்காட்டினார். இந்த பாடல் அதிக வரி வசூலித்த பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு அறிவுறுத்தும் விதமாக சங்கக் காலப் புலவரான பிசிராந்தையார் பாடினார்.
"சாப்ட்"வேர் ஆக மாறிய திமுக எம்எல்ஏக்கள்.. "ஹாட்" பிரச்சினைகளிலும் "கூல் கூல்" போக்கு!
பட்ஜெட் மீதான விவாதம்
தமிழ்ப் பாடலை சரியாக பாடியமைக்கு லோக்சபாவில் அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்றைய தினம் லோக்சபாவில் நடந்தது.
மீண்டும் படித்து பார்த்தேன்
அப்போது நீலகிரி எம்.பி. ஆ ராசா பேசுகையில் புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டியதன் மூலம் நிர்மலா சீதாராமன் சரியான தகவலை தெரிவித்துள்ளார். அந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன். அது வரி வசூலிக்கும் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பில்லை
ஆனால் நாங்கள் கவலைப்படுவதெல்லாம் வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்துதான். எங்கிருந்து வரியை பெறுவது, எப்படி வரிவிலக்கு அளிப்பது என்பது குறித்துதான் கவலையே. எனவே இதற்கும் நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய பாடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
காத்தலும் வகுத்தலும்
எனவே வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்த திருக்குறளில் உள்ள சரியான பாடலை நான் அமைச்சருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு" என்ற வரியை சுட்டிக் காட்டினார்.
4 அம்சங்கள்
இதன் பொருள் என்னவென்றால், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் ஆகிய நான்கையும் மன்னன் செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த 4 அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் இல்லை என தெரிவித்தார்.