கோயில்களில் யாகம் நடத்தியதால் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது?: விளக்கம் கேட்டு மனு
Recommended Video
சென்னை: கோயில்களில் யாகம் நடத்தியதால் தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் எவ்வளவு மழை பெய்தது என அறிக்கை கேட்டு இந்து அறநிலையத்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழக கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்றும் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை அண்மையில் உத்தரவிட்டது.
இந்து அறநிலையத்துறையின் இந்த உத்தரவு சர்ச்சைக்குள்ளானது. இந்து அறநிலையத்துறைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மற்றும் பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மழை வந்தாலும் மோசம்... மழை வராட்டியும் மோசம்... சென்னைக்கு தண்ணீரில் கண்டம்
நேற்று பெய்த மழை
அதேநேரத்தில் நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கோவில்களில் யாகம் செய்ததால்தான் மழை பெய்து வருகிறது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்திருந்தார்.
அறநிலையத்துறைக்கு மனு
இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்டு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இந்து அறநிலையத்துறைக்கு மனு அளித்துள்ளார். கருப்பணசாமி என்ற அந்த நபர் அளித்த மனுவில் யாகம் செய்தால் மழை வரும் என்ற விதி மற்றும் அரசாணையின் நகல்களை அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
எவ்வளவு மழை பெய்தது?
வெயில் குறைய யாகம் செய்யலாம் என்ற விதியின் நகல் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் யாகம் நடத்திய பிறகு எந்தெந்த ஊர்களில் எவ்வளவு அளவு மழை பெய்தது என்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
எந்த அதிகாரம்
மேலும் மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த எவ்வளவு செலவானது என்ற விவரங்களும் அந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளது. அதோடு எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும் என கருப்பணசாமி தனது மனுவில் கேட்டுள்ளார்.