ஆகஸ்டு 13-ல் பட்ஜெட்.. மு.க.ஸ்டாலின் செம பிளான்.. குடும்ப தலைவிகளுக்கு வரப்போகுது ஹேப்பி நியூஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் நீண்ட கால ஏக்கத்துக்கு பிறகு மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றது முதல் சிறப்பான நடவடிக்கையால் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுடன் நல்ல பெயர் வாங்கி விட்டார் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 5 முத்தான திட்டங்களில் ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் இலவச பயணம் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
கவனம் ஈர்த்த ஸ்டாலின்
இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தபோது சுமார் 36,000 என்ற நிலையில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பு அரசின் தீவிர நடவடிக்கையால் 2,000-க்குள் முடங்கி விட்டது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குதல், போதிய தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டு வாங்குதல் என பணியில் சுறுசுறுப்பாக இயங்கியது தமிழ்நாடு அரசு.
மேகதாது அணை விவகாரம்
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவையும் பாராட்டை பெற்றுள்ளன. தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. ஆனால் தி.மு.க கொடுத்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்பது பெண்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சிறப்பு கவனம்
தி.மு.க அரசு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொது பட்ஜெட்டுடன் தமிழ்நாட்டில் முதன் முறையாக வேளாண்மை துறைக்கு என்று தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தனது அரசு தாக்கல் செய்யப்போகும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தரமான பட்ஜெட்
பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத்துக்கும், மக்களுக்கும் பயன் பெறும் வகையில் தரமான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று அமைச்சர்களையும் அரசு உயர் அலுவலர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏறகனவே அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் அறிவுரை
வேளாண் பட்ஜெட்டை பொறுத்தவரை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்ஜெட்
பொதுவாக மார்ச் மாதம் ஒவ்வொரு நிதியாண்டும் முடிவுக்கு வருவதால் மார்ச்சுக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது. நடப்பாண்டு தேர்தல் காலமாக இருந்ததால் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்திருந்தார் கடந்த அதிமுக அரசின் நிதியமைச்சர் ஓபிஎஸ். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் அரசு, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு மட்டும் அரசு ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட அடிப்படை செலவினங்களுக்கான ஒப்புதலை பெறும் வகையில் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை நிறைவேற்றுவர். ஆனால், கடந்த அ.தி.மு.க அரசு 6 மாதங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் முன்பாக..
இந்த வகையில் பார்த்தால் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அக்டோபர் வரை கால அவகாசம் இருக்கிறது. இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவெடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் முதல்வர் மு.க,ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் குறித்த விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.மேலும், நடப்பாண்டின் முழு பட்ஜெட் ஆகஸ்டு 13-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம்
இது தவிர குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்துவது குறித்து மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சரவையின் கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர்களின் விருப்பம்
வருகிற 15-ம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தன்று சென்னை தலைமை செயலகத்தில் முதன் முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . மேலும் அன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சிறப்புரை ஆற்றவுள்ளார். இந்த உரையின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் விரும்பியதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஆலோசனை
முதல்வருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு சில அதிகாரிகளும் குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித் தொகை வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, சுதந்திர தினத்துக்கு முன்கூட்டியே பட்ஜெட் வெளியிட்டு அறிவித்தால் பயன்மிக்கதாக இருக்கும் என்று கூறியதாக தெரிகிறது. தற்போது ஆகஸ்ட் 13-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அன்றைய தினம் பெண்களை மகிழ்விக்க கூடிய சூப்பர் அறிவிப்பு வரபோகிறது என்று வட்டாரங்கள் உறுதியுடன் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.