யாரை நம்பி நான் பொறந்தேன்! புலம்பும் அதிமுக ‘மாஜி’! எம்பி சீட் பறிபோனதால் அதிருப்தி! ‘அவங்க’ காரணமா?
சென்னை : அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக தான் தான் அறிவிக்கப்படப் போகிறோம் என மிக உறுதியாக இருந்த அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி முடிவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் அறிவித்த பெட்ரோல் டீசல் விலை.. இன்றும் மாற்றமில்லை.. 7 நாளாக அதே விலையில் விற்பனை
ராஜ்யசபா எம்பி வேட்பாளர்
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.
திமுக பட்டியல்
திமுக தனக்கான 4 இடங்களில் 3 இடங்களுக்கு போட்டியிடுகிறது. ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். 3 இடங்களில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்
இதேபோல் பலத்த எதிர்பார்ப்புகள் குழப்பங்கள் , போட்டிகளுக்குப் பிறகு அதிமுக சார்பில் இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுகிறது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து சிவி சண்முகம் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து தர்மரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மூத்த நிர்வாகி ஏமாற்றம்
வட மாவட்டங்களில் இருந்து ஒருவரும் தென் மாவட்டங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என ஏற்கனவே நாம் கூறியிருந்தோம். எதிர்பார்த்தது போலவே அதிமுக வேட்பாளர் பட்டியலும் இருந்தது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த அமைச்சர் ஒருவர் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சிவி சண்முகத்தின் பலத்த செல்வாக்கு மற்றும் அரசியல் தலையீடு காரணமாக தனக்கான வாய்ப்பு பறிபோனதால் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
எதிரணியினருக்கு நெருக்கடி
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார். தலைநகரான சென்னையில் முக்கிய தலைவராக வலம் வந்த அவர் தினமும் ஊடகங்களை சந்தித்து ஆளும் கட்சியாக இருக்கும் போதும் சரி எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி பலத்த வாதங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
மிகுந்த மன உளைச்சல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தலைமை தனக்கு பொறுப்பு இருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன் எனக் கூறியிருந்தார். கடந்த தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என கூறி இருந்த அவருக்கு எதிர்பாராதவிதமாக சீட்டு கொடுக்கப்படவில்லை, இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் உடன் இருக்கும் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்