கடும் வறட்சியில் சென்னை.. நீர் பற்றாக்குறையை முக்கிய ரயில் நிலையங்கள் சமாளிப்பது இப்படி தான்
Recommended Video
சென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் நீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருந்தாலும், தலைநகர் சென்னையில் உள்ள மக்கள் தொகை காரணமாக சற்று அதிகமாகவே திண்டாட்டம் காணப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளின் பல இடங்களில் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட தண்ணீர் பஞ்சத்தை பார்த்தது இல்லை என பெருமையாக சொல்லிக் கொண்ட பல பகுதி மக்கள் இன்று தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர்.
பருவ மழை கைவிட்டதால் ரயில்நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சில மாதங்களாக சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, முக்கிய ரயில் நிலையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் சப்ளை செய்யப்பட்டு வந்த தண்ணீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து, வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் பயணிகளின் குடிநீர் தேவைக்கு ஏற்பவும் இதர தேவைகளுக்கும் உரிய தண்ணீரை விநியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ரயில் பெட்டிகளை பராமரிக்கும் பணிகள் மற்றும் நடைமேடைகளை தூய்மைப்படுத்துதல், உள்ளிட்ட அத்தியாவசிய ரயில்வே பணிகளுக்கு தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான போதிய அளவு தண்ணீர் தர முடியாமல், ரயில்வே நிர்வாகம் திணறி வருகிறது. இதனையடுத்து தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக, செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரி மற்றும் பிற நீர் நிலைகளில் இருந்து, தண்ணீர் எடுத்து வரப்படுவதாக கூறப்படுகிறது. இதில் செங்கல்பட்டு ரயில் நிலைய பிளாட்பாரம் அருகிலேயே, கொளவாய் ஏரியின் முகப்பு உள்ளதால் ரயில் டேங்குகளில் தண்ணீர் நிரப்பும் பணி கொஞ்சம் எளிதாக இருப்பதாக ரயில்வே ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதில் முதற்கட்டமாக 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்குகளில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்த சிறப்பு ரயில் ஒன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் முழுவதும், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதே போல சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் மூலம் தண்ணீர் எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.