அதிமுகவுக்கு என்ன ஆனது... உற்சாகமின்றி நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழா
சென்னை: அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது பற்றி தான் அக்கட்சியின் உள்வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதிமுக சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்ட முறையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.
ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அந்த வழிமுறையை அதிமுக தலைமையான ஓ.பி.எஸ்.மற்றும் இ.பி.எஸ். பின்பற்றத் தவறிவிட்டதாக அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.
பிரமாண்டம்
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஆண்டுதோறும் கிறிஸ்துவ பெருமக்களின் புனித பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவை மிக பிரமாண்டமாக நடத்தி கேக் வெட்டி சிறப்புரை நிகழ்த்துவார். குமரி மாவட்டத்திலோ அல்லது சென்னையிலோ இதற்கான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
களையிழந்த
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கீழ்பாக்கத்தில் உள்ள புனித அன்னை ஆலய வளாகத்தில் மிக எளிமையாக கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டது. மொத்தமாக 20 முதல் 25 பேர் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதிமுகவில் உள்ள கிறிஸ்துவ பிரமுகர்கள் அமைச்சர் பெஞ்சமின், ஜே.சி.டி.பிரபாகர், விஜிலா சத்யானந்த் எம்.பி. ஆகியோர் மட்டுமே அதில் பங்கேற்றனர்.
வெகுவிமரிசையாக
ஜெயலலிதா காலத்தில் ரம்ஜான் இஃப்தார் பண்டிகையாக இருந்தாலும் சரி, கிறிஸ்துமஸ் விழாவாக இருந்தாலும் சரி கட்சி சார்பில் அந்த நிகழ்ச்சிகளை கோலாகலமாக, வெகு விமரிசையாக நடத்தி அந்த சமுதாய மக்களை அழைத்து கவுரவப்படுத்துவார். அவரது அடிச்சுவட்டை பின்பற்றி செயல்படுவதாக கூறும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இதனை செயல்படுத்தாததால் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.
நல உதவி
இதனிடயே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் மிகச்சிறப்பாக கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி அதில் நல உதவிகளையும் வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன்.