கிடப்பிலுள்ள மத்திய அரசு திட்டங்கள்.. விரைவுபடுத்த தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு
சென்னை: தமிழகத்தில் கிடப்பில் உள்ள மத்திய அரசின் திட்டங்களை விரைவுப்படுத்தவும், அதிலுள்ள பிரச்சனைகளை சரி செய்யவும் தனி அதிகாரி ஒருவர் மாநில அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் துணைச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணனே, தற்போது தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அத்துறையினுடைய செயலாளர் ஷம்பு கல்லோலிகர் பிறப்பித்துள்ளார்.
வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, சுற்றுச்சூழல்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்த வரை கூடங்குளம் அணுமின் நிலையம் விரிவாக்க திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை, பாரத்மால பரியோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த திட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் மற்றும் விவசாயிகள், தொடர்ச்சியாக பெரும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர் நிலைகளை காவு கொடுத்து சென்னை - சேலம் இடையே அமைக்க முயற்சிக்கும் 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக மக்களும், விவசாயிகளும் பெருந்திரளாக போராடி வருகின்றனர்
மக்கள் விரும்பாத திட்டங்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களையும் செயல்படுத்த விட மாட்டோம் என மாநில அரசு பெயரளவில் சொன்னாலும், செயலில் மத்திய அரசுக்கு ஆதரவாக தான் உள்ளது. இதன் பலனை சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கண்கூடாக அனுபவித்தது ஆளும் அதிமுக - பாஜக கூட்டணி.
தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்து விட்டு தற்போது 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உடனடியாக தடை விதிக்க மறுத்து வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.,
மத்திய அரசு திட்டங்களுக்கு எதிராக மக்களின் மனநிலை கொந்தளிப்புடன் உள்ள சூழலில், மேற்கண்ட திட்டங்களின் நிலை எவ்வாறு இருக்கிறது, திட்டங்கள் மீது நீதிமன்றத்தில் தொடுத்திருக்க கூடிய வழக்குகளின் பின்னணி மற்றும் நிலை என்ன என்பதையெல்லாம் மத்திய அரசுக்கு தெளிவாக எடுத்துரைக்க கூடிய வகையில் இதற்காகவே தனி அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எப்படியாவது மக்கள் எதிர்க்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, இந்த தனி அதிகாரி நியமனம் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.