சென்னையில் கொரோனா ஜெட் வேகம்.. சிறப்பு குழு நியமனம்.. மக்களுக்கு மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 200-க்குள் சென்ற கொரோனா, தற்போது மீண்டும் 200-க்கும் மேல் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவையில் அதிகரிக்கும் கொரோனா.. ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. முழு விவரம்!
ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் சென்னை மாநகராட்சி ககன்தீப் சிங் பேடி,காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையில் கொரோனா தாக்கம் முன்பின்னாக பதிவாகி வருகிறது, சென்னையில் முககவசம் அணியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது எனவே அதை தடுக்க காவலர்கள் அனைத்து பகுதிகளுலும் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
சிறப்பு குழு
முக கவசம் அணியாத அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு குழுவை அமைத்து ஆய்வு செய்ய வருகிறோம். அதுமட்டுமில்லாமல் சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா விதிமுறைகளை முறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும் சிறப்பு குழு ஒன்றை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வர முடிவு செய்துள்ளோம்.
மெகா தடுப்பூசி முகாம்
வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடம், சுப நிகழ்ச்சிகள், வணிக வளாகங்கள் மருத்துவமனைகள் ஆகிய நான்கு இடங்களை ஊரடங்கு மண்டல அமலாக்க குழு தொடர்ந்த ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இனி வரும் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
அபராதம்
இதுவரை 56 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை கையிருப்பில் உள்ளது. இதுபோன்ற தடுப்பூசி சிறப்பு முகாமில் நடக்கும் பொழுது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 38 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அதாவது 65% நபர்கள் சென்னையில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். முகக்கவசம் அணிய வில்லை என்றால் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும். இதுவரை கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய் கொரோனா விதிகளை மீறியதால் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.