திங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…!
சென்னை: சனி, ஞாயிறு லீவு முடிஞ்சு திங்கட்கிழமை காலையில பள்ளிக்கு போக பசங்க நம்மள என்ன பாடு படுத்தறாங்க. அவங்களை சமாதானம் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குள்ள நமக்கு டங்குவார் அந்துருது. நீண்ட விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு போகும்போது ஏற்படும் இந்த வெறுப்பும், சலிப்பும் பள்ளிப் பருவத்தோடு முடியிறதில்லை என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அதனால்தான் பெரியவர்கள் ஆன பிறகும் திங்கட்கிழமை அலுவலகம் போக நமக்கும் கசக்குது. அதிலும் ஆயுத பூஜை, விஜயதசமி என கிட்டத்தட்ட நாலுநாள் தொடர்விடுமுறைக்கு பிறகு வேலைக்கு போகணும்னு நினைச்சாலே கடுப்பாகுது.
இந்த கடுப்பும், சிடுசிடுப்பும் நமக்கு மட்டும்தான் ஏற்படுதுன்னு நினைச்சிடாதீங்க. உலகம் முழுக்க இதே கதைதான். இதைத்தான் Monday Blues என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். திங்கட்கிழமை அல்லது நீண்ட விடுமுறைக்கு பிறகு வரும் வேலைநாட்கள் நமக்கு வேம்பாய் கசப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் பிரதான காரணம், விடுமுறை நாட்களை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதுதான். குறிப்பாக விடுமுறை நாட்களின் காலை நேரம் மிகவும் முக்கியமானது. வாரம் முழுக்க காலையில நேரத்திற்கு எழுந்து, வேக வேகமா குளிச்சு, ரெடியாகி, அலுவலகம் போறோம். ராத்திரியில டிவி பார்த்து முடிச்சிட்டு, அதுக்கப்புறம் செல்போனை நோண்டிட்டு தூங்குறதுக்கு எப்படியும் 11 மணிக்கு மேல ஆயிடுது. மறுபடியும் அடுத்த நாள் காலையில அலாரம் வெச்சி எழுந்து, மீண்டும் அதே ஓட்டம்.
இந்த பரபரப்பான ஷெட்யூல் காரணமா நமக்கு தேவையான அளவு தூக்கம் கிடைக்கிறதில்லை. அதனால இதை ஈடுகட்டுறோம்னு சொல்லி சனி, ஞாயிறுகளில் 8 அல்லது 9 மணி வரை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்குறோம். இரண்டு நாள் 8 மணி வரை தூங்கிய உடல், அடுத்தநாளான திங்கட்கிழமையும் அதையே எதிர்பார்க்கிறது. ஆனால் இது நடக்காத போது, எழுந்திருக்கும்போதே எரிச்சல் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. அதுக்கப்புறம் முதல் கோணல் முற்றும் கோணல் கதைதான். இந்த பிரச்னையை தவிர்க்கணும்னா விடுமுறை நாட்களிலும், வழக்கமான நேரத்திற்கு எழுந்துகொள்ளுங்கள் என்கிறார்கள். அதற்கு பதில் இரவு படுக்கைக்கு செல்லும் நேரத்தை சற்று முன்னதாக மாற்றிக் கொள்ளுங்கள். தேவையான தூக்கமும் கிடைத்துவிடும், காலையில் எழும் பழக்கமும் தடைபடாது.
அந்த மனசுதான் சார்
அடுத்த பிரதான காரணம் மனம் சார்ந்தது. வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு செல்லும்போது, ஹைய்யா.. லீவு ஆரம்பிச்சிருச்சி என மனம் சந்தோஷத்தில் மிதக்கிறது. சனிக்கிழமை டூ ஞாயிற்றுக்கிழமையும் இதே குதூகலம்தான். ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து திங்கட்கிழமைக்கு செல்லும்போது, அய்யய்யோ வேலையை ஆரம்பிக்கணுமே, இன்னும் அஞ்சு நாள் இப்படியே ஓடணுமேன்னு பயம் வந்துருது. மனம் பதட்டமடைய ஆரம்பித்துவிடுகிறது. இந்த எண்ணம்தான் திங்கட்கிழமை காலை நேரத்தை கசப்பாக்குகிறது.
எல்லாப் பயலும் இப்படித்தாம்யா!
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஆட்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்திருக்கிறது. அதாவது பெரும்பாலான பணியாளர்கள் திங்கட்கிழமை காலை 10 முதல் 11 மணி வரையிலான நேரத்தில் மிகவும் சோகமாக இருக்கிறார்களாம். அதேபோல வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு பிறகு மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். விடுமுறை குறித்த எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் தான் இதற்கு காரணம் என்கிறார்கள். இந்த Emotional Shift-ஐ கையாளத் தெரிந்துவிட்டால், திங்கட்கிழமை கசக்காது. அதுக்கு என்ன பண்ணனும்னு கேட்கறீங்களா? ரொம்ப சிம்பிள், வெள்ளிக்கிழமை மதியமே வேலையை மூட்டை கட்டி வெச்சிட்டு விட்டத்தை பார்க்குறதை நிறுத்திட்டு, திங்கட்கிழமை காலையில செய்ய வேண்டிய வேலைக்கான தயாரிப்பு வேலைகளை செஞ்சிடணும். இதை செஞ்சிட்டாலே, திங்கட்கிழமை காலை பதட்டத்தில் பாதி குறைந்துவிட! ும். பதட்டம் குறைந்தாலே, வேலை சீராகவும், சிறப்பாகவும் நடக்க ஆரம்பித்துவிடும்.
ஷாக் ஆயிருவீங்க
இன்னொரு விஷயம் சொன்னால் நீங்கள் மிரண்டு போய்விடுவீர்கள். உலகில் அதிக மாரடைப்புகள் திங்கட்கிழமைதான் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள், வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு 20 சதவீதமும், பெண்களுக்கு 15 சதவீதமும் அதிகமாக இருக்கிறதாம். வேலையில்லாத வெட்டி ஆபிசர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் இரத்த அழுத்தம், வேலைக்கு செல்பவர்களின் இரத்த அழுத்தம் போல் திங்கட்கிழமைகளில் அதிகரிப்பதில்லையாம்.
முழுமையாக அனுபவித்தால்
அதேபோல சரியாக ஓய்வெடுத்து, விரும்பியதை செய்து விடுமுறையை முழுமையாக அனுபவித்துவிட்டால், அடுத்தநாள் மனமும், உடலும் வேலை செய்ய தயாராகிவிடும். ஆனால் நாம் பெரும்பாலும் விடுமுறையை சரியாக அனுபவிக்காமல், வீணடித்துவிடுவதால் அந்த விரக்திதான் திங்கட்கிழமையை பலி வாங்கி விடுகிறது என்கிறார்கள். குறிப்பாக, விடுமுறை நாட்களிலும் அலுவலக இ-மெயிலை திறந்து பார்ப்பது, அதற்கு பதில் போடுவது போன்ற செயல்களால், விடுமுறை மகிழ்ச்சி அரைகுறையாக மடிந்துபோய்விடுகிறதாம். அதனால் முடிந்தவரை, விடுமுறை நாளில் அலுவலகத்தை பற்றியே யோசிக்காதீர்கள். தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை கூட ஏற்காதீர்கள். விடுமுறை என்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான பிரத்யேக நேரம். அதை எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் வீணாக்காதீர்கள் என்கிறார்கள்.
அடக்கம் முக்கியம்ண்ணே!
இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னங்க என்று ஆர்வமுடன் கேட்டால், வார இறுதிநாட்களில் ஆட்டத்தை குறைங்க என்கிறார்கள். அட ஆமாங்க, கொலம்பஸ்.. கொலம்பஸ்.. வீட்டாச்சு லீவுன்னு பார்ல போய் சரக்கடிச்சு மட்டையாகும் ஆசாமிகள்தான் திங்கட்கிழமைகளில் அதிகம் தடுமாறுகிறார்களாம். அதிக குடி காரணமாக மனமும், உடலும் பாதிப்படைவதால், அது வேலைக்கு செல்லும் எண்ணத்தையும் சிதைக்கும் என்கிறார்கள். அதற்கு பதில் மனதிற்கு பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவது, தோட்ட வேலை, சமையல் என விரும்பும் வேலைக ளை செய்வது என விடுமுறையை கழிப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு மீண்டும் பணிக்கு திரும்புகிறார்களாம்.
மண்டைல ப்ளூஸ்!
மற்றொரு முக்கியமான டிப்ஸ், பிடிக்காத வேலையை செய்யாதீர்கள் என்பது. பிடித்த வேலையை செய்பவர்களை இந்த Monday Blues எல்லாம் பாதிப்பதே இல்லையாம். செய்யும் வேலையும், வேலை செய்யும் இடமும் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தால், அய்யோ வேலைக்கு போகணுமே என்ற எண்ணமே தோன்றாது. வடிவேலு.. பிரபா ஒயின்ஸ் ஓனருக்கு போன் போட்டு எப்போ சார் கடையை திறப்பீங்க? என்று கேட்டது போல, நாமும் ஹலோ, திங்கட்கிழமை காலையில எப்போ சார் ஆபிசை திறப்பீங்க என்று ஆவலுடன் காத்திருப்போம். எல்லாத்துக்கும் மனசுதான் சார் காரணம். நித்தியானந்தா ஆசிரமம் போல அழகான பெண்கள் நிறைந்திருக்கும் அலுவலகத்திற்கு சீக்கிரம் கிளம்பிப் போக யாருக்குத்தான் கசக்கும்.
கொட்டாவி மாதிரியாம்ய்யா!
Monday Blues என்பது தொற்றுவியாதி. ஒருவர் கொட்டாவி விட்டால் அடுத்தவருக்கும் கொட்டாவி வருவது போல, ஒருத்தர் திங்கட்கிழமை காலையில இன்னும் ஒரு வாரம் வேலை செய்யனுமா...ன்னு இழுத்தா, ஒட்டுமொத்த டீமே காத்து போன பலூன் மாதிரி சொய்...னு ஆயிடும். புகை உடல்நலனிற்கு கேடு விளைவிக்கும். புகை பிடிக்காதீர், புகை பிடிக்கவும் அனுமதிக்காதீர்னு... தியேட்டர்ல படம் போடுறதுக்கு முன்னாடி சொல்றா மாதிரி, லீவு முடிஞ்சு அலுவலகம் போனால் நீங்களும் கடுப்பாகாதீர்கள், அடுத்தவர்களையும் கடுப்பாக அனுமதிக்காதீர்கள். அதுதான் அந்த வாரத்தை மகிழ்ச்சியாக ஓட்டுவதற்கான மந்திர சாவி.
-கௌதம்