நான் சொல்றது சத்தியமான பொய்.. நம்புனா நம்புங்க, நம்பாட்டி போங்க..!
சென்னை: தலைப்பை படிச்சீங்களா.. புரிஞ்சுதா.. புரியலைனா மறுக்கா மறுக்கா படிங்க.. ஏன்னா மேட்டரே அதைப் பத்திதான். ஒருத்தர் பொய் சொன்னா உண்மை தெரியவந்ததும் அவர் சொன்னது பொய்தான்னு நாம கண்டுபிடிச்சிருவோம். ஆனா அந்த உண்மை, உண்மையிலேயே உண்மைதானான்னு எப்படி கண்டுபிடிக்கிறது. ரொம்ப தலையை சுத்துதா? வெரி டெலிகேட் பொசிஷன்.
ஆங்கிலத்தில் Paradox என்று ஒரு சொல் இருக்கிறது. Paradox என்றால் ஒரே விஷயத்தில் இரண்டுவிதமாக பேசுவது என்று சொல்லலாம். "ஆசையைத் துறக்க ஆசைப்படு" என்பதுகூட ஒரு Paradoxதான். இதை சிறப்பாக விளக்க ஒரு கதை இருக்கிறது.
முன்பொரு காலத்தில் கிரேக்கத்தில் ஒரு குரு இருந்தாராம். வாதத் திறமையில் அவரை அடிச்சிக்க சுத்துபட்டு ஏரியாவிலேயே யாரும் கிடையாதாம். அப்படி பாயிண்ட் பாயிண்ட்டா புட்டு வெச்சி எதிராளியை திணறடிப்பாராம். அந்த காலத்துல வக்கீல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுற அத்தனை பேரும் நம்ம ஆளுகிட்டதான் அப்பரண்டிசா வந்து சேருவாங்களாம். அந்த மாதிரி ஒரு நாள், தூரத்து ஊர்ல இருந்து ஒரு பையன் வந்தான். ஐயா, உங்க புகழ் எங்க ஏரியா வரைக்கும் பரவி இருக்கு. நான் உங்ககிட்ட வழக்காடுதல் கலையை கத்துக்க வந்திருக்கேன்னு பவ்யமா சொன்னான்.
சரிப்பா தம்பி, தாராளமா சேர்ந்துக்கோ. இதுதான் கோர்ஸ் ஃபீஸ் என்று லம்ப்பா ஒரு அமவுண்ட் கேட்டாரு குருநாதர். தம்பிக்கு தலை கிறுகிறுன்னு ஆயிடுச்சி. இருந்தாலும் அரை பாடி லாரியில ஆணியடிச்சா மாதிரி ஸ்டெடியா நின்ன தம்பி, குருவே அவ்வளவு பணம் எங்கிட்ட இல்லேன்னான். அப்படின்னா அபௌட் டர்ன் போட்டு அப்படியே போயிருன்னாரு குரு. பணம் இப்போ இல்ல குருவே, ஆனா அதுக்கு ஒரு பிளான் இருக்கு என்றான் சிஷ்யன். அவனே அதை விளக்கவும் ஆரம்பிச்சான்.
குருவே, நான் உங்ககிட்ட மொதல்ல வித்தையை கத்துக்குறேன். அப்புறம் கிடைக்கிற முதல் கேசுல கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி ஜெயிச்சு அதுல வர்ர காசுல ஃபீசை கட்டிடுறேன். ஆனால் முதல் கேசுல என்னால ஜெயிக்க முடியலேன்னா ஃபீசை கட்ட மாட்டேன்னான் சிஷ்யன். குரு கொஞ்ச நேரம் மோவாயை தடவிட்டே மோட்டுவளையை பார்த்தாரு. சரி, நம்ம சிஷ்யன் எப்படி தோத்துப் போவான். கண்டிப்பா ஜெயிச்சுடுவான், அதனால இந்த அக்ரிமெண்டுக்கு ஒத்துப்போம்னு முடிவு பண்ணி கையெழுத்து போட்டுட்டாரு. ஆனா தன் சிஷ்யன் ஒரு ஜகஜ்ஜால ஜித்தன் என்பது அந்த குருவுக்கு அப்போ தெரியல.
சிஷ்யன் சின்சியரா படிச்சான், காலத்துல கோர்ஸை முடிச்சான். போயிட்டு வர்ரேன் குருவேன்னு ஊருக்கு நடையை கட்டிட்டான். தம்பி, அந்த ஃபீஸை சீக்கிரம் அனுப்பு என்று வாழ்த்தி வழியனுப்பி வெச்சிட்டாரு குரு. போனவன் போனவன்தான். காலம் போச்சே தவிர, காசு வந்த பாடில்லை. குருவும் ரிமைண்டர் கடுதாசி எல்லாம் போட்டுப் பார்த்தாரு. ஒண்ணும் ஒர்க் அவுட் ஆகலை. எப்போ கேட்டாலும் இன்னும் கேசு கிடைக்கல குருநாதான்னே சொல்லிகிட்டு இருந்தான் சிஷ்யப்புள்ள.
இப்படியே முழுசா மூணு வருஷம் ஓடிப் போச்சு. குருவுக்கு ஒருநாள் குப்புனு கோவம் தலைக்கேறிடுச்சி. ஏண்டா, நானே பாயிண்ட் பாயிண்டா பிரிச்சு பின்னி பெடல் எடுக்குறவன். ஏங்கிட்டயே உன் டகால்டி வேலையை காட்டுறியான்னு கடுப்பாகி அவன் மேலேயே பிராது கொடுத்துட்டாரு. என் கிட்ட படிச்சிட்டு ஃபீஸ் கொடுக்காம ஏமாத்துறான்றதுதான் கேசு. இப்போ இந்த கேசுல சிஷ்யன் தனக்காக தானே வாதாடுறான். ஆக, இதுதான் அவன் வாதாடுற முதல் கேசு. இதுலதான் இருக்கு மேட்டரே.
ஜட்ஜ் கேச விசாரிக்க ஆரம்பிச்சாரு. இரண்டு பேரும் தங்கள் தரப்பு வாதத்தை விலாவாரியா விளக்கினாங்க. ஒரு வருஷம், இரண்டு வருஷம் பரவாயில்லீங்க.. மூணு வருஷமா ஒருத்தன் ஒரு கேசு கூட கிடைக்கலேன்னு சாக்கு சொல்லிகிட்டே இருந்தா, அவனுக்கு என் பணத்தை கொடுக்க மனசு இல்லேன்னுதானே அர்த்தம்னாரு குரு. அப்படி இல்லீங்க ஜட்ஜய்யா, முதல் முதல்ல ஆஜராகிற கேசு நல்லா பெரிய கேசா இருந்தாதானே எனக்கும் பெருமை, என் குருவுக்கு பெருமைன்னான் சிஷ்யன்.
கடைசியில என்னதான்பா சொல்ல வர்ரேன்னாரு ஜட்ஜ். ஐயா, என் குரு என் மேல நம்பிக்கை இல்லாம பிராது கொடுத்துட்டாரு. நானும் இதையே என் முதல் கேசா எடுத்துகிட்டு ஆஜர் ஆகிட்டேன். இந்த கேசுல நான் பணம் கொடுக்கத் தேவையில்லேன்னு நீங்க தீர்ப்பு சொல்லிட்டா, உங்க தீர்ப்புப்படி நான் அவருக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. அதுவே நான் குருநாதருக்கு பணம் கொடுக்கணும்னு நீங்க தீர்ப்பு சொல்லிட்டா, நான் என் முதல் கேசுல தோத்துப் போயிட்டதா தானே அர்த்தம். அப்படின்னா அக்ரிமெண்ட் படி நான் அவருக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. ஆக, எப்படிப் பார்த்தாலும் நான் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை யுவர் ஹானர்னு போட்டான் ஒரு போடு. ஜட்ஜ் ஜெர்க் ஆயிட்டாரு.
சிஷ்யனே இந்த பொள பொளந்தா குரு கம்முன்னு விட்டுருவாரா. அவர் ஆரம்பிச்சாரு. கனம் நீதிபதி அவர்களே, இந்த பயல் ஒரு ஃபிராடு பயல் என்று தெரியாமல் இவனுக்கு நான் வித்தையை கத்துக் கொடுத்துட்டேன். இப்போ வினையை அனுபவிக்கிறேன். இவன் கத்துகிட்ட வித்தைக்கு உரிய பணத்தை கொடுக்கணும்னு நீங்க தீர்ப்பு சொல்லிட்டீங்கன்னா, உங்க தீர்ப்பை மதிச்சு இவன் எனக்கு பணம் தரணும். ஒருவேளை அவன் வாதங்களை நீங்க ஏத்துகிட்டு, பணம் தரத் தேவையில்லேன்னு அவனுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லீட்டீங்கன்னா, அவன் தன்னோட முதல் கேசுல ஜெயிச்சிடுவான். அதனால் ஒப்பந்தப்படி அவன் எனக்கு பணம் தரணும். ஆக, எப்படிப் பார்த்தாலும் அவன் எனக்கு பணம் தந்துதான் ஆகணும்னு உறுதியா சொல்லிட்டாரு குரு. ஜட்ஜ் நிலைமைதான் ரொம்ப தர்மசங்கடமா போச்சு. அப்புறம் வேற வழி இல்லாம இந்த கேச 100 வருஷம் தள்ளிவைக்கிறேன்னு தள்ளி வெச்சிட்டு, விட்டா போதும்னு ஓடியே போயிட்டாராம் ஜட்ஜய்யா.
இப்போ உங்களுக்கு Paradox என்றால் என்னன்னு ரொம்ப தெளிவா புரிஞ்சிருக்கும். நம்ம வாழ்க்கையிலயும் இந்த மாதிரி சிக்கல்கள் அடிக்கடி வரத்தான் செய்யும். அம்மாவும், பொண்டாட்டியும் ஆளுக்கொரு பக்கம் நின்னு தங்களுக்கு சாதகமான பாயிண்டுகளை அள்ளி வீசுனா நம்ம நிலைமையும் அந்த ஜட்ஜ் மாதிரிதான் ஆகிடும்.
வீட்டை விடுங்க, நாட்டுலயும் இதே நிலைதான். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா, நடக்காதான்னு ஆர்வமா நியூஸ் பார்க்க ஆரம்பிச்சா, இதேமாதிரி இரண்டுக்கும் பொருந்துற மாதிரியே நியூஸ் சொல்றாங்க. ஒருபக்கம் பணப்புழக்கமே இல்லைன்னு எதிர்கட்சிக்காரங்க காட்டு கத்து கத்துறாங்க. இன்னொரு பக்கம் எல்லாம் சரியாத்தான் இருக்கு, ஆதாரம் இதோ இருக்குன்னு ஆளுங்கட்சிகாரங்க புள்ளிவிபரங்களை தூக்கி வீசுறாங்க.
இதில் எது உண்மை, எது பொய். எல்லா உண்மைக்குள்ளேயும் கொஞ்சம் பொய் இருக்கு. அதேபோல எல்லா பொய்க்குள்ளேயும் கொஞ்சம் உண்மை இருக்கு. நாமதான் கொஞ்சம் விலாவாரியா விசாரிச்சு முடிவுக்கு வரணும், மக்களே.
- கௌதம்