தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு ஆஸ்திரேலியா பயணம்.. ஒரு வாரம் தங்குகிறார்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை: விபத்துக்களை குறைப்பது குறித்தும், போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்தும் அறிந்து கொள்வதற்காகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவினர் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
தமிழகத்தில் சாலை விபத்துக்கள் பெருகி வருகிறது. தரமான நான்கு வழிச்சாலைகள் தமிழகத்தில் அதிகம் இருந்தும் விபத்துக்கள் இங்குதா மிக அதிகமாக இருக்கிறது. இதையடுத்து சாலை விபத்துக்களை குறைக்கவும் போக்குவரத்தை மேம்படுத்தவும் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சென்னையில் போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் அருண் தலைமையில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் காரணமாக சென்னையில் தற்போது விபத்துக்கள் ஓரளவு குறைந்துள்ளது. இதேபோல் மாநில அளவில் போக்குவரத்து கமிஷ்னர் சமயமூர்த்தி தலைமையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன்காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் விபத்துக்கள் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்தவும், விபத்துக்களை குறைக்கவும், விபத்துகள் நடந்தால் காயம் ஏற்பட்டவர்களை மீட்பது குறித்து ஆஸ்திரேலியாவிற்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. ஏனெனில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தான் உலகிலேயே சாலை போக்குவரத்து திறம்பட செயல்படுத்தப்படுகிறது. எப்படி அங்கு செயல்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக அதிகாரிகள் குழுவினை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி உள்ளது தமிழக அரசு.
இதன்படி நெடுஞ்சாலைத்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ், சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷ்னர் அருண், சாலைத்துறை இயக்குனர் அருண் தம்புராஜ், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி ரங்கராஜன், நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் கீதா, சென்னை பெருநகர வளர்ச்சி குழு தலைமை திட்டமிடல் அதிகாரி பொன் செந்தில் நாதன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்திற்கு சென்றனர். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து அந்நாட்டின் பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு தமிழகம், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் இடையே விபத்து மற்றும் அவசர சிகிச்சை மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. .