அமைச்சர்களை தொடர்ந்து அதிகாரிகளுக்கும் ஜாக்பாட்... வெளிநாடுகளுக்கு பறக்க ஆயத்தம்
சென்னை: முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததை போல், துறை சார்ந்த உயரதிகாரிகளும் வெளிநாடு டிரிப் செல்ல உள்ளார்களாம்.
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை அழைக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயரதிகாரிகள் பலர் சென்றிருந்தனர். அதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமெரிக்கா சென்று வந்தார். இவர்களை போலவே அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், வேலுமணி, எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட பலர் ஆஸ்திரேலியா, எகிப்து, என சென்று வந்தனர்.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை, கல்வித்துறை உயர் அதிகாரிகள் இப்போது வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். அரசு செலவில் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பறந்து திரும்பிய நிலையில், இப்போது அதிகாரிகளுக்கும் அந்த யோகம் கிட்டியுள்ளது. முதற்கட்டமாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆஸ்திரேலியா செல்லவிருக்கின்றனர். அங்குள்ள பாரம்பரிய கட்டிடங்களை பராமரிக்கும் முறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பாரம்பரிய முறையில் உருவாக்கப்படும் கட்டிடங்கள் மற்றும் அதன் பராமரிப்பு முறைகள் பற்றி அறிந்துகொள்வதற்காக பொதுப்பணித்துறையின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் குழு விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறது. இதனிடையே கல்வித்துறை உயர் அதிகாரிகள் குழுவும் பின்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்குள்ள கற்பிக்கும் முறை பற்றி அறிந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் இப்போதே வெளிநாடு பயணங்களை முடித்துக்கொள்ள அதிகாரிகள் தரப்பிலும் ஆர்வம் காட்டப்படுகிறது.
ஆஸ்திரேலியா நாட்டின் அரசு பொதுப்பணித்துறை பொறியியலாளர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே தமிழக பொதுப்பணித்துறை பொறியியலாளர்கள் அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.