ரத்னகிரி டூ தூத்துக்குடி.. 13 தமிழரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு.. ஸ்டெர்லைட் வழக்கின் பின்னணி!
சென்னை: தமிழகத்தில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட, 13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட்யை திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Recommended Video
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் குழுமம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் பின்னணி என்ன?
லண்டனை தலைமையிடமாக கொண்டது வேதாந்தா குழுமம். இது 1992-ல் முதன் முதலாக மகாராஷ்டிராவின் ரத்னகிரியில்தான் தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் ஆலையை அமைத்தது. ஆனால் மக்கள் போராட்டங்களால் ஸ்டெர்லைட் ஆலை ரத்னகிரியில் மூடப்பட்டது.
1994-ல் தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்தார். 1994-ல் அக்டோபர் 30ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
- 1996 முதல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டாலும் மக்கள் எதிர்ப்பு தொடக்கம் முதலே இருந்து வந்தது.
- 2010-ல் ரூ750 கோடி வரி ஏய்ப்பு வழக்கில் அக்குழுமத்தின் துணைத் தலைவர் வரதராஜன் கைது செய்யப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- 2013-ல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் தூத்துக்குடி மக்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்தும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
- பொதுநலன் வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2013-ல் பிறப்பித்த உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.
- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான ஸ்டெர்லைட்டின் அப்பீல் மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி கொடுத்தது.
- தேசிய தீர்ப்பாயத்தின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்தாலும் அது தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டது.
- 2018-ல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் பகுதியில் மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் 100-வது நாளில் 2018 மே 22-ந் தேதியன்று மாவட்ட ஆட்சியரகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
- போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என தீர்ப்பளித்தது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான வேதாந்தா குழுமத்தின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.