தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா.. பாதிப்பு 9 ஆக உயர்வு.. அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
சென்னை: கலிபோர்னியா மற்றும் துபாயில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.
Recommended Video
கடந்த மாதம் 27ம் தேதி ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரம் என்ஜினயருக்கு கொரோனா இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு உத்தரப்பிரதேச மாநிலலம் ராம்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கடந்த 12ம் தேதி சென்னை வந்தார். அவர் அமைந்தகரையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கினார். அவர் காய்ச்சல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் கடந்த 17ம் தேதி அயர்லாந்து டப்ளினில் இருந்து சென்னை வந்த மாணவருக்கு கொரோனா பாதப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதபின்னர் நேற்று மேலும்3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். அதன்படி தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பயணிகள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்பெயினில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார். இதன் மூலம் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று இரவு தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. கலிபோர்னியாவில் இருந்து வந்த 65 வயது பெண்ணுக்கு கொரோனா உள்ளது.துபாயில் இருந்து வந்த 43 வயது ஆண் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உள்ளது.
இவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 365 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.