பால் குடித்துவிட்டு தூங்கிய பெண் குழந்தை பலி.. மூச்சுத்திணறலா? பெண் சிசு கொலையா? போலீஸ் விசாரணை
சென்னை: கொருக்குப்பேட்டையில் பால் குடித்துவிட்டு தூங்கிய 2 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை சிபி ரோடு ரயில்வே காலனி குடிசை பகுதியை சேர்ந்தவர் மணி (28). இவருடைய மனைவி தேவி (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் இவர்களுக்கு 3 ஆவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் குழந்தை அழுததால் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனர்.
மருத்துவமனைக்கு
காலையில் எழுந்து குழந்தையை குளிக்க வைப்பதற்காக தூக்கியபோது குழந்தை எந்தவித அசைவும் கொடுக்காததால் பதறியடித்து கொண்டு உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயிரிழப்பு
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆர்.கே. நகர் போலீஸார் விரைந்து குழந்தையின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
காரணம்
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே குழந்தையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
பரபரப்பு
பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதா அல்லது ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருக்க மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்ததால் திட்டமிட்டு கொல்லப்பட்டதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொருக்குப்பேட்டை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.