பாம்புக்கு பாலாபிஷேகம்.. கழுத்தில் போட்டு அருள் வாக்கு.. பெண் சாமியாரை தட்டித்தூக்கிய வனத்துறை!
Recommended Video
சென்னை: நாகப்பாம்புக்கு பாலாபிஷேகம் செய்ததோடு அதனை கழுத்தில் போட்டு அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த கபிலா என்பவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் அப்பகுதியில் அருள்வாக்கு சொல்லி வருகிறார். இவரிடம் அருள்வாக்கு கேட்பதற்காக ஏராளமானோர் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இவரது கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை செய்துள்ளார்.
தீயாய் பரவியது
இதனை வீடியோவாக எடுத்த சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.
கழுத்தில்போட்டு
அதோடு நாகப்பாம்புக்கு பாலாபிஷேகம் செய்தும் அதனை சிவனை போல தனது கழுத்தில் போட்டு அருள்வாக்கு கூறி வந்தார் கபிலா. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
வனச்சரக அதிகாரிகள்
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிரிஜாலா கபிலா குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி செங்கல்பட்டு வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையிலான வனச்சரக அதிகாரிகள், பெண் சாமியார் கபிலாவிடம் நாக பூஜை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிறையில் அடைப்பு
தமிழ்நாடு வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். பின்னர் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.