சென்னை கோடம்பாக்கத்தில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த சொகுசு கார்.. போதையில் தள்ளாடிய இளம் பெண்!
சென்னை: சென்னையில் நள்ளிரவில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம் பெண் தாருமாறாக சென்றிருக்கிறார். இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னையில் நள்ளிரவு வேளைகளில் போதையில் பலர் அதி வேகமாக காரை ஓட்டி செல்வது அதிகமாக நடக்கிறது. சிலர் குடிபோதையில் கண்டபடி சென்று விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இப்படி சொகுசு கார்கள் மோதி விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையை தனியாக பட்டியலே போடலாம். இப்படி விபத்து ஏற்படுத்துபவர்களில் பெரிய இடத்து பிரபலங்கள் தொடங்கி பெரிய ஸ்டார்களும் அடக்கம்.
கர்நாடக மாநில பதிவெண்
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் அசுர வேகத்தில் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திக்கொண்டனர்.
விரட்டி பிடித்த பொதுமக்கள்
அதேநேரம் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் வேகமாக சென்ற அந்த காரை, சில வாகன ஓட்டிகள் விரட்டி சென்று வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே மடக்கினர். அப்போது காரை ஓட்டிய இளம்பெண், மதுபோதையில் நிற்க முடியாமல் தள்ளாடியபடி இருந்திருக்கிறார். இதுகுறித்து. தகவலறிந்த வடபழனி போலீசார் விரைந்து வந்து, போதையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர்.
வழக்கு பதிவு
அதைதொடர்ந்து கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த ஆஷா வனிதா (30) என்பது தெரியவந்தது. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டு பின்னர் காரில் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அதிவேமாக வாகனம் ஓட்டியது, பொதுமக்களை அச்சுறுத்தியது, மது போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
போலீசில் புகார்
பின்னர் இளம்பெண்ணை போலீசார் கடுமையாக எச்சரித்து எழுதிவாங்கி கொண்டு சொந்த ஜாமீனில் விட்டனர்.. அதேநேரம் இதற்கிடையே கோடம்பாக்கம் யூஐ காலனியை சேர்ந்த ஜெயரோசா (46) என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் போதையில் கார் ஓட்டிய ஆஷா வனிதா மீது புகார் கொடுத்தார். அச்சுறுத்தும் விதமாக காரை ஓட்டியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். இந்த சம்பவத்தால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.