ஆடி அமாவாசை : திருச்செந்தூர், திருவேடகம், சுருளி அருவியில் தடையை மீறி வந்த மக்களை தடுத்த போலீஸ்
லாக்டவுன் அமலில் உள்ளதால் ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க திருச்செந்தூர், திருவேடகம், சுருளி அருவிப்பகுதியில் தடையை மீறி குவிந்தனர். அனைவரையும் காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.
சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதே போல திருவேடகம் கோவிலுக்கும், சுருளி அருவிக்கும் தர்ப்பணம் தர வந்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் கோவிலில் கூட்டமாக வழிபடவும் திருவிழாக்கள் நடத்தவும் தடை உள்ளது. ஆடி அமாவாசை நாளான இன்று பல கோவில்களில் தர்ப்பணம் கொடுப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி பல பக்தர்கள் புனித தலங்களுக்கு சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் ஆண்டுதோறும், ஆடி அமாவாசையன்று பக்தர்கள் பிதுர்களுக்கு வைகை ஆற்றில் அமர்ந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் பொதுமக்கள் வைகையாற்றில் தர்ப்பணம் கொடுக்க கூடத் தொடங்கினர். இதை முன்கூட்டியே அறிந்த சோழவந்தான் காவல் நிலையத்தினர், தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை அழைத்து கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டுள்ளது, நீங்கள் கூட்டம் போடாமல் இந்த இடத்தை விட்டு கலைந்து செல்ல கேட்டுக் கொண்டனர்.
வைகை ஆற்றில் இறங்காத வகையிலும் கோயிலுக்குள்ளும் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தனர். பக்தர்கள் சிலர் சாலையோரமாக தர்ப்பணம் செய்ய அங்கிருந்த புரோகிதர்களை கேட்க தொடங்கினர். இதையறிந்த போலீஸார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பிறகு கோயில் வாசலிலே வழிபட்டு விட்டு வீடுகளுக்கு திரும்பினர்.
தனிமை முகாமில் இருந்த.. 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த கயவன்.. மும்பையில் நடந்த கொடுமை
இதே போல தேனி மாவட்டம் சுருளி அருவியில் பக்தர்கள் நீராடி பிண்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். பின்னர் பூதநாராயணன் கோயிலில் நவதாணியம் வைத்தும் வேலப்பர் கோயில் கைலாயநாதர் கோயில் சிவன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்
கொரோனா வைரஸ் நோய்தொற்று கம்பம் பகுதியில் அதிக அளவில் பரவி வருவதால் கம்பம் சுருளிப்பட்டி கூடலூர் போன்ற பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது. இதன் காரணமாக ஆடி அமாவாசை இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் சுருளி அருவிக்கு தர்ப்பணம் செய்வதற்கு வர வேண்டாம் என தேனி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று சுருளிஅருவிக்கு செல்லும் சாலைகளான சுருளிப்பட்டி பகுதியின் நுழைவாயில் கோகிலபுறம் நுழைவாயில் உள்ளிட்டப்பகுதிகளில் காவல்துறை சார்பில் தடுப்பு போடப்பட்டு சுருளி அருவிக்கு தர்ப்பணம் செய்வதற்காக செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிப்பு செய்து வருகின்றனர்.