வரும் சனிக்கிழமை ஆடி பெருக்கு நாள்.. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும்.. ஐஜி அறிவிப்பு
சென்னை: ஆடி பெருக்கு தினமான வரும் சனிக்கிழமை தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும் என பதிவுத்துறை ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. இங்கு வீடு, விளைநிலம் , கட்டடங்கள் உள்பட சொத்துக்கள் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இங்கு பத்திர பதிவு என்பது பொதுவாக விஷேச நாள்களில் அதிகமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவதை நல்ல நாளில் இருக்க வேண்டும் என்ற மக்களின் நம்பிக்கை காரணமாக பொதுவாக விஷேச நாள்களில் அதிகம் வருவார்கள்.
விஷேச நாள்களில் பொதுவாக தமிழகத்தில் 18 ஆயிரம் பத்திரங்கள் வரை பதிவாகும். மற்ற நாள்களில் 5ஆயிரம் முதல் 7 ஆயிரம் பத்திரங்கள் மட்டுமே பதிவாகும்.
ஆனால் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு அதிக ஆர்வம்காட்டவில்லை. இதனால் பத்திர பதிவு என்பது சார் பதிவாளர் அலுவலகங்களில் மிகமிக குறைவாகவே இருக்கிறது.
இந்நிலையில வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடி பெருக்கு நாளாகும். எனவே நிலங்கள், வீடுகள், இடங்கள் என சொத்து வாங்குவோர் ஆடிபெருக்கு நாளில் பத்திரம் பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். எனவே அன்றைக்கு விடுமுறை(சனிக்கிழமை) என்ற போதிலும் மக்கள் நலன் கருதி தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களும் காலை 10 மணி முதல் வழக்கம் போல் செயல்படும் என பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மண்டல டிஐஜிகளுக்கும் சுற்றிறிக்கை அனுப்பி உள்ளார். ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும் அனைத்து ஆவணப்பதிவுகள் மேற்கொள்ளும் வகையில் அன்றைக்க காலை 10 மணி முதல் சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.