மக்களின் பாதுகாப்பு கருதி நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும்.. ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கண்டனத்திற்குரியது.
நியூட்ரினோ திட்டம் தொடர்பாக திமுக ஆட்சியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், மக்களின் எதிர்ப்புகளை கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிக்கு எதிராக முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது, தமிழக மக்களுக்கும் குறிப்பாக தேனிப் பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியளிக்கிறது.
தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, உயர்நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு தன்னிச்சையாக இது போன்ற முடிவினை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன்,மிக மோசமான கதிரியக்க ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும் என தேனி மாவட்ட மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள்.
தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி மத்திய அரசு, இந்தத் திட்டத்தை சிறப்புத் திட்டமாகவும் திட்டமாக அறிவித்து பச்சைக் கொடி காட்டியிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள அதிமுக அரசு, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும், நகர்ப்புறத்துறை நியூட்ரினோ கட்டுமானத்திற்கான அனுமதியையும் வழங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு கைவிடவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேனி மாவட்ட மக்களுடைய கொதிப்பையும், எதிர்க்குரலையும் சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பதை இப்போதே எச்சரிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.