ரஜினியுடன் இணைந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன், ஆனால்... கமல் கட்சியில் இணைந்த பொன்ராஜ்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு மாதமே மீதமிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதீப் பங்கீடு பணிகளில் பிஸியாக உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பிப்ரவரி 27 அன்று, மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அதேபோல் சட்டப்பஞ்சயாத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதேபோல் இவரையும் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மநீம பெருவெற்றிப் பெறச் செய்ய இக்கணம் முதல் அவர் தீவிரமாக செயலாற்றுவார். நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் நம்மை தேடி வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இப்போ சொல்லுங்க.. மநீம வகுத்த எதிர்பாராத வியூகம்.. தேர்தல் களத்தில் கேம் சேஞ்சராக மாறும் கமல்ஹாசன்!
தொடர்ந்து பேசிய பொன்ராஜ், "அப்துல் கலாமின் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் பாஜக தடுத்தது. கமல் விடுத்த அழைப்பை ஏற்று, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளேன். ரஜினியுடன் இணைந்து 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கான கொள்கைகளை உருவாக்கினேன். ஆனால், உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து வெளியேறிவிட்ட பிறகு, கமல்ஹாசனின் அழைப்பை ஏற்று இணைக்கிறேன். சமூக நீதி, அரசியல் நீதி, நீடித்த பொருளாதார நீதி அனைத்தும் மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும்" என்றார்.