5 மாநில சட்டசபைத் தேர்தல்... காங்கிரஸ் கட்சிக்கு கஷ்டம் தான்... ஏபிபி சி-வோட்டர் அதிரடி சர்வே..!
சென்னை: தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது ஏபிபி சி-வோட்டர் நிறுவனம்.
அதன்படி கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் புதுச்சேரியில் அதிமுக-பாஜக கூட்டணியை விட இரண்டு சதவீதம் மட்டுமே கூடுதல் ஆதரவு பெற்றிருப்பதால் அங்கு திரிசங்கு நிலையில் உள்ளது முடிவு. தமிழகத்தை பொறுத்தவரை தனித்து போட்டியிடாமல் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டால் கணிசமான தொகுதிகளை கைப்பற்றக் கூடும் என முடிவுகள் வந்திருக்கின்றன.
இதில் காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிர்ச்சி தரக்கூடியது என்னவென்றால் அஸ்ஸாம், கேரளா, ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது தான். தமிழகம மற்றும் மேற்கு வங்கத்தை பொறுத்தவரை ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் எண்ணவில்லை.
இதனால் இந்த முடிவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாது. ஆனால் அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்படும் கேரளாவில் மீண்டும் கம்யூனிஸ்ட் கொடி பறக்கவிருப்பது தான் தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பின் ஹைலைட்.
இதேபோல் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் 12 முதல் 14 இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக -பாஜக கூட்டணி 14 முதல் 18 இடங்களில் வெற்றிபெறும் எனவும் முடிவுகள் வந்துள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் கையில் இருக்கும் ஒரு மாநிலமும் பறிபோகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசு மீது தமிழகத்தில் இவ்வளவு அதிருப்தியா..? 44% பேர் பிடிக்கவில்லை எனக் கூறி அதிரடி..!
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டால் ஓரளவு சொல்லிக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இல்லையெனில் மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்று சொற்ப தொகுதிகளில் மட்டுமே வெல்லக்கூடும் என கருத்துக் கணிப்பு உணர்த்தியுள்ளது.
இதனிடையே இனி வரும் நாட்களில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்களின் மனம் கவரும் வகையில் பரப்புரை, தலைமையின் வியூகம் என அனைத்தும் சரியாக இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கும் வெற்றி வசப்படும்.