தமிழக சட்டமன்ற தேர்தலின் 'X-Factor' கமல்ஹாசனா? - ஏபிபி கருத்துக்கணிப்பு.. மநீம தொண்டர்கள் ஏககுஷி!
சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 8.3 சதவிகித வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக ஏபிபி C-Voter கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா நேற்று முன்தினம் (பிப்.26) வெளியிட்டார்.
அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தார். மேலும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு:சக்கர நாற்காலி' சர்ச்சைக்கு விளக்கம் - மநீம கூட்டணியில் சரத்குமார்
162 தொகுதிகள் வரை
இந்நிலையில், ஏபிபி C-Voter ஐந்து மாநிலங்களில் யார் ஆட்சியைப் பிடிக்கப்போவது என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 154 முதல் 162 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 41 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58-66 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 28.6 சதவிகித வாக்குகளை மட்டுமே இந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டிப்பு முன்னேற்றம்
இதற்கிடையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2-6 இடங்களில் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 8.3 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், இது கமல் உட்பட மநீம நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் ஒரு மெகா உற்சாக டானிக் எனலாம். ஏனெனில், மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள், இந்த கருத்துக்கணிப்பு தகவலின் படி, அப்படியே டபுளாக அதிகரித்திருக்கிறது. கட்சி ஆரம்பித்த பிறகு முதன் முறையாக 2019 மக்களவை தேர்தலை மக்கள் நீதி மய்யம் எதிர்கொண்டது. அந்த தேர்தலில் ம.நீ.ம பெற்ற மொத்த வாக்குகள் 15,75,640. சதவிகிதம் அடைப்படையில் சொல்ல வேண்டுமெனில், 3.77% வாக்குகள்.
கடந்த கால ரெக்கார்டு
கடந்த மக்களவைத் தேர்தலில் 12 இடங்களில் ம.நீ.ம மூன்றாவது இடத்தைப் பிடித்தது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தை பிடித்த மக்கள் நீதி மய்யம், இம்மூன்று தொகுதியிலும் 10 சதவீதத்துக்கு மேலான வாக்குகளையும் பெற்றது. சென்னையை தவிர கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம்,ஸ்ரீபெரும்பத்தூர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது. இவையெல்லாம் கடந்த கால ரெக்கார்டு.
பெரும் தலைவலி
ஆக, 2019ல் நாம் தமிழர் கட்சியை விட சற்று குறைவாக 3.77% வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம், இப்போது ஏபிபி கருத்துக்கணிப்பில் படி 8.3 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இந்த கருத்துக்கணிப்பின் மூலம், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், யார் முதல்வர் என்பதை தீர்மானிக்கும் X-Factor-ஆக கமல்ஹாசன் இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த 2019 மக்களவை தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம், முக்கியமான தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பிரித்து, முக்கிய கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. விளக்கமாக சொல்ல வேண்டுமெனில், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் தொகுதியின் மக்களவை தேர்தல் முடிவுகளை பார்ப்போம். இங்கு, தி.மு.க-வின் எஸ்.ஆர்.பார்த்திபன் 6,06,302 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அ.தி.மு.க-வின் சரவணனோ 4,59,376 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 1,46,926.
கலக்கத்தில் பெரிய கட்சிகள்
ஆனால் இதே சேலம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் பெற்ற வாக்குகள் 58,662. நாம் தமிழர் கட்சியின் ஏ.ராசா பெற்ற வாக்குகள் 33,890. அ.ம.மு.க-வின் எஸ்.கே.செல்வம் பெற்ற வாக்குகள் 52,332. இவை மூன்றையும் கூட்டினால் மொத்தம் 1,44,884 வாக்குகள். இங்கு நோட்டா பெற்ற வாக்குகள் 17,130. அதையும் சேர்த்தால் 1,62,014 வாக்குகள். தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை விட 15,088 அதிகம். இதன்மூலம், அ.தி.மு.க - தி.மு.க எனும் இரு பெரிய கட்சிகளுக்கு மாற்றாகப் பதிவாகும் வாக்குகளே, அவ்விரு கட்சிகளில் ஏதோ ஒன்றின் வெற்றியையோ, தோல்வியையே நிர்ணயிக்கும் Deciding Factor-ஆக அமைவது தெரிகிறது. குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் இதில் முக்கிய பங்காற்றுகிறது.
எக்ஸ் ஃபேக்டர் கமல்
அதேசமயம், ஏபிபி கருத்துக்கணிப்பில் அமமுக 1 - 5 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், 6.9 சதவிகித வாக்குகளை கைப்பற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இதர கட்சிகள் 5 - 9 இடங்களில் வென்று, 14.8 சதவிகித வாக்குகளை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. 3.77 சதவிகித வாக்குகளுக்கே பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஏபிபி கருத்துக்கணிப்பின் படி 8.3 சதவிகித வாக்குகள் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்துடன் டிடிவியின் அமமுக மற்றும் இதர சில கட்சிகள் கூட்டணி வைக்கும் பட்சத்தில், நிச்சயம் கமல்ஹாசன் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலின் எக்ஸ்-ஃபேக்டராக இருக்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை.