இவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்
சென்னை: "இவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்லபார்த்தது.. எல்லாம் கற்பனை.. மேடை மேடையா அழுதுட்டு வருகிறார் துரைமுருகன்" என்று ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிமுக வேட்பாளரான ஏசி சண்முகத்தின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இப்படி ஒரு அறிவிப்பு வரும்போது ஏசி சண்முகம் பிரச்சாரத்தில் இருந்தார். விஷயம் கேள்விப்பட்டதும், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு, ஏ.சி.சண்முகம் அதிமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பிரதிநிதிகள் ஒப்படைத்த பிறகே, ஏசி.சண்முகத்தின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்ட ஏசி சண்முகம் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.
அப்போது பேசிய அவர், "நான் புதிய நீதிக்கட்சி தலைவராக இருந்தாலும் அதிமுக உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டையை வேட்புமனுவில் தந்திருக்கிறேன்.
துரைமுருகன் கூட்டத்தினர் சலசலப்பை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே துரைமுருகன் மேடை, மேடையாக அழுகிறார். இதற்காகவே நாடகம் ஆடுகிறார்.
அவரது மகனை லாரி ஏற்றி கொல்ல சதி செய்யப்பட்டதாக சொல்கிறார். தேர்தலையொட்டியே இப்படி கற்பனையாக பொய் சொல்கிறார். ஏன்னா, இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். இதுக்கெல்லாம் தோல்வி பயம்தான் காரணம்" என்றார்.