அக்காள் கணவர், குடும்பத்தை கொன்றது ஏன்?.. சவுகார்பேட்டை கொலை குறித்து கைலாஷ் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான கைலாஷ் திடுக்கிடும் வாக்குமூலத்தை போலீஸாரிடம் அளித்துள்ளார். தனது சகோதரியின் கணவர், அவரது குடும்பம் என பாராமல் நெற்றி பொட்டில் சுட்டது ஏன் என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார்.
சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் தலீல்சந்த் (74). அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் குமார் (40). இவருக்கு புனேவை சேர்ந்த ஜெயமாலா என்பவருடன் திருணமாகி இரு மகள்கள் உள்ளனர்.
தலீல் சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் குமார் ஆகியோர் கடந்த 11-ஆம் தேதி மிகவும் கொடூரமான முறையில் நெற்றி பொட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புனே
இந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷிற்கு இந்த கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து புனே தப்பியோடிய கைலாஷ் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கைலாஷ் திடுக்
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கைலாஷ் திடுக் தகவலை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் கைலாஷின் மூத்த சகோதரி ஜெயமாலா, இவருக்கும் ராஜஸ்தானை சேர்ந்த ஷீத்தல்குமாருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது.
ஜெயமாலா
பல்வேறு கனவுகளுடன் திருமண வாழ்வில் ஜெயமாலா அடியெடுத்து வைத்த நிலையில் ஷீத்தல் குமாருக்கு அறிவுத் திறன் குறைவு என்பது தெரியவந்தது. இதை அவரது பெற்றோர் மறைத்து திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தனது பெற்றோரிடம் ஜெயமாலா கூற அவர்களோ குடும்பம் நடத்துமாறு தெரிவித்தனர்.
ரூ 7 கோடி ஜீவனாம்சம்
இதனால் வேறு வழியின்றி ஷீத்தலுடன் குடும்பம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் மாமியார் புஷ்பா பாய், ஜெயமாலாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கைலாஷிடம் ஜெயமாலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஷீத்தலுடன் வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்த ஜெயமாலா அவரை பிரிந்து புனே நீதிமன்றத்தில் ரூ 7 கோடி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.
விசாரணை
ஜீவனாம்சம் பணத்தை கொடுக்க முடியாது என தலீல்சந்த் குடும்பத்தினர் திட்டவட்டமாக கூறிவிட்டதால் கைலாஷ் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். அதன்படி இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார். இந்த சம்பவத்தில் இரு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. அவைகளில் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரருடையது என தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.