திருப்பூரில் பெண்களை வசியம் செய்த ஜோசியர்.. படுகொலை செய்த இளைஞர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்
சென்னை: திருப்பூரில் பெண்களை வசியம் செய்த ஜோசியர் ரமேஷை படுகொலை செய்த இளைஞர் ரகு அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார் (40). இவர் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்கா முன்பு அமர்ந்து கிளியை வைத்து ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன் தினம் காலையில் வழக்கம் போல அங்கு வந்து ஜோதிடம் பார்க்கும் பணியில் ரமேஷ் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பணிகளை முடித்துவிட்டு மதிய உணவுக்காக பென்னிகாம்பவுண்ட் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடியே வந்த ஒரு நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு ரமேஷை வெறியோடு வெட்டி சாய்த்தார்.
பின்னர் கொலையாளி தன் வாகனத்தில் வைத்திருந்த நோட்டீஸ்களை அங்கிருப்பவர்களுக்கு விநியோகித்தார். அதில் ஜோசியர் ரமேஷ், பூங்காவுக்கு வரும் பெண்களை வசியம் செய்து பாலியல் தொழில் செய்து வந்தார். அவரால் என்னுடைய காதலி வசியம் செய்யப்பட்டு தற்போது அவர் இருக்கும் இடம் கூட எனக்கு தெரியவில்லை என அந்த நோட்டீஸில் தெரிவித்திருந்தார்.
பின்னர் நான் நிச்சயம் நீதிமன்றத்தில் சரணடைவேன் என கத்தி கூறினார். அதன்படி சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது பெயர் ரகு என தெரியவந்தது.