EXCLUSIVE: நிர்மலா சீதாராமன் சொல்றது ஈஸி.. செய்வது கடினம்.. நிவாரணம் சரியா போய்சேராது.. கஸ்தூரி கவலை
சென்னை: "நம்ம ஊர்ல இலவசம்னு சொன்னால் விஷத்தைகூட எடுத்து ஒளிச்சி வெச்சிப்பாங்க.. 3 மாசத்துக்கு இலவச கேஸ்-ன்னு சொல்லிட்டாங்க.. கருப்பு சந்தையும், இடைத்தரகர்களும் நடுவுல லாபம் அடைஞ்சிக்கிட்டு யாருக்கு போய் சேரணுமோ அவங்களுக்கு அந்த நிவாரணம் போய் சேராதோ அப்படிங்கிற ஒரு பயம் எனக்கு இருக்கு.. சில விஷயங்களை முறைப்படுத்தாமல், டமால், டிமீல் என மத்திய அரசு தடாலடி அறிவிப்புகளை வெளியிடுவது சரியல்ல.. இப்போது அவதிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க முதலில் வழி செய்ய வேண்டும்" என்று நடிகை கஸ்தூரி உருக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
Recommended Video
நடிகை கஸ்தூரி.. நல்ல அறிவாளி.. எந்த டாப்பிக் என்றாலும் சரளமாக அதே சமயம் விஷயங்களுடன் தரவுகளை தரக்கூடியவர்.. இவரது தமிழ் உச்சரிப்பே தனி ஸ்பெஷல்.. சமூக நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ஆனாலும் சரி, தனக்கு மனதில் பட்டதை படக்கென்று வெளிப்படுத்துபவர்.
ஒரு நடிகை என்பதையும் தாண்டி, சமூக செயற்பாட்டாளருமாக தன்னை விழைத்து கொண்டவர்.. நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்தும், அது சம்பந்தமாக கருத்தை பதிவிட்டும் வருபவர்... இவரது துணிச்சலான பதிவுகளுக்கு ஏராளமான ஆதரவுகள் வந்தாலும் சில எதிர்ப்புகளும் வரவே செய்யும்.. ஆனால் அந்த எதிர்ப்பையும் தனது பதிலடி ட்வீட்களால் திணறடிப்பார் கஸ்தூரி!
நிதியமைச்சர்
இந்நிலையில் நேற்று ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3 மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் அறிவிப்பு பற்றினதுதான்.. "திட்டமிடப்படாத அறிவிப்புகளுக்கு இது ஒரு உதாரணம்... இலவசமோ இல்லையோ எல்லா குடும்பத்திற்கும் மாசம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு செய்திருக்கலாம்... ஏற்கனவே கேஸ் ஏஜென்சிகள் சிலிண்டர்களை புக் செய்தால் அதை உரிய நேரத்தில் வழங்காமல் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார்.
ராகுல்காந்தி
ராகுல்காந்தி உட்பட பலரே நிதியமைச்சரின் அறிவிப்புகளை பாராட்டி கொண்டிருக்கும் வேளையில், கஸ்தூரி மட்டும் ஏன் இப்படி ஒரு பதிவை போட்டார்? குறிப்பாக இலவச கேஸ் அறிவிப்பு குறித்த அவரது கருத்து என்ன என்பது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பாக அவரிடமே கேட்டோம்.. அப்போது விரிவான பதிலை நமக்கு அளித்த பேட்டிதான் இது:
அறிவிப்புகள்
"நிதியமைச்சர் நிவாரண திட்டங்கள் எல்லாம் அறிவிச்சிருக்காங்க.. அதை எல்லாம் நான் பாராட்டறேன்.. ஆனால் இவை சம்பந்தமாக எதுவும் ஆலோசிக்காமல் வெறும் அறிவிப்புகளை மட்டும் அறிவிச்சிட்டாங்களோன்னு எனக்கு ஒரு ஐயப்பாடு இருக்கு.. எல்லாரும் வீட்டிலேயே இருங்க.. எல்லாம் வீடு தேடி வரும்.. வீடு தேடி மருந்து வரும் அப்படின்னு சொல்றது ஈசி.. ஆனால் செய்யறது கஷ்டம்.
பணியாளர்கள்
இன்னொன்னு, வீடு இருக்கிறவங்களுக்கு எல்லாம் வீடு தேடி வரும்.. வீடே இல்லாமல் அங்கங்க நிறைய பேர் புலம்பெயர்ந்த பணியாளர்கள்தான் இருக்காங்க.. இன்னைக்கு தமிழ்நாட்டிலேயே பார்த்தீங்கன்னா வடக்கத்திகாரர்கள்தான் நிறைய பேர் லேபரா இருக்காங்க.. இந்த மாதிரி இவங்க ஒரு இடத்திலயும், குடும்பம் ஒரு இடத்திலயும் இருக்கும்போது அவங்களுக்கான ஏற்பாடுகள் என்ன? அப்படிங்கறதுக்கு ஒரு தெளிவு கிடைச்சா நல்லா இருக்கும்.
வித்தியாசம்
அரசாங்கம் எல்லாமே யோசிச்சுதான் செஞ்சிருப்பாங்க.. நமக்குதான் சொல்லலை அப்படின்னு இருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. ஆனால் இதுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த மத்திய அரசு கொடுத்த அறிவிப்புக்கும், அது நடைமுறையில் எப்படி செயல்பட்டது என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கறதால இந்த கேள்வியை நான் முன்வைக்கறேன்.
கேஸ் சிலிண்டர்கள்
மத்தபடி நிதியமைச்சர் அறிவித்த எல்லா அறிவிப்புகளையும் நான் வரவேற்கிறேன்.. அது சரியாக, சொன்னபடி நடைமுறைப்படுத்தப்பட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.. ஆனால் எனக்கு பெரிய டவுட் இருக்கு.. குறிப்பாக கேஸ் சிலிண்டர் அறிவிப்பு.. 3 மாசத்துக்கு இலவச கேஸ்-ன்னு சொல்லிட்டாங்க.. ஆனால் நம்ம ஊர்ல இலவசம்னு சொன்னால் தேவையோ இல்லையோ, விஷத்தைகூட எடுத்து ஒளிச்சி வெச்சிப்பாங்க.. அது ஒரு மனித இயல்பு.. எதையாவது இப்படி ஃப்ரீ தந்துட்டால், அது கருப்பு சந்தையும், இடைத்தரகர்களும் நடுவுல லாபம் அடைஞ்சிக்கிட்டு யாருக்கு போய் சேரணுமோ அவங்களுக்கு அந்த நிவாரணம் போய் சேராதோ அப்படிங்கிற ஒரு பயம் எனக்கு இருக்கு... எனக்கு மட்டுமில்லை, நிறைய பேர் மனசிலயும் இந்த சந்தேகம் இருக்கு.
புக்கிங்
இந்த அறிவிப்பு வந்த உடனேயே என்னுடைய கியாஸ் ஏஜென்சிக்கு போன் பண்ணி கேட்டேன்.. அங்கே நடுத்தர வர்க்க மக்கள் எல்லாருமே ஆபீஸ் வாசல்ல வந்து நிக்கறாங்களாம்.. புக்கிங் ஒன்னுக்கு ரெண்டா குடுக்கறாங்களாம். எதுக்கோ வாங்கி 2 வெச்சிக்கிடுவோமே அப்படிங்கிற பீதியில புக்கிங் பண்றாங்களாம். கொஞ்சம் வெயிட் பண்றவங்ககூட புக்கிங்-கில் இப்பவே போடுறாங்களாம்.. அந்த ஆபீஸ்லயும் ஆட்கள் இல்லாமல் பாதி ஸ்டாப்ஸ்தான் இருக்காங்க.. கடமை உணர்ச்சியோட எல்லாருமே வந்துட்டு இருந்தாலும், டெலிவரி பண்ற தினக்கூலிகளை அவங்களால அரேஞ் பண்ண முடியல.
டிமாண்ட்
வண்டிகளுக்கு பெர்மிட் வாங்க முடியல.. நிறைய தடைகளோடுதான் அவங்க தங்களுடைய சர்வீஸ்களை செய்துட்டு இருக்காங்க.. என்கிட்ட சொல்றாங்க, "கஷ்டமாதாங்க இருக்கு... எங்களுக்கு டிமாண்ட் டபுள் ஆகி போச்சு.. எங்களுடைய வேகம் பாதியா போச்சு.. கண்ணை கட்டுதுங்கிற மாதிரி என்கிட்ட சொன்னாங்க.. எல்லாத்தையுமே பீதியிலதான் வாங்கணும் அப்படிங்கிற இடத்துல கொண்டு போய் மக்களை விடகூடாது.. தெலுங்கானா மாநிலத்தில பார்க்கிறோம்... டெல்லியில பார்க்கிறோம், ஹாஸ்டல்கள், கல்லூரி மாணவர்கள் அங்கங்கே விடுதிகளில் அடைபட்டு இருக்காங்க.. இதனால் எங்கியாவது வெளியே போயிட மாட்டோமா அப்படின்னு கூட்டம் கூட்டமா கூடறாங்க.. அதுக்கெல்லாம் ஒரு வழியை முதல்ல பண்ண வேணாமா?
காலேஜ், ஹாஸ்டல்கள்
உதாரணத்துக்கு, ஒரு காலேஜில் சமையலுக்கு ஆள் இல்லை.. அவன் என்ன பண்ணுவான்? ஆள் இருந்தால்தானே சாப்பாடு போடுவான்? ஆள் வரலைன்னா என்ன பண்ண முடியும்? முதல்ல பொருட்கள் கிடைக்கணும்.. அந்த மாதிரி சில விஷயங்களை வந்து முறைப்படுத்தாமல், டமால், டிமீல் என தடாலடி அறிவிப்பு தந்துட்டா எப்படி? இன்னைக்கு ஆந்திரா-தெலுங்கானா பார்டர்ல தள்ளுமுள்ளு ஆயிடுச்சு. டெல்லியில இருந்து அவங்கவங்க பெங்காலுக்கும், உத்திரபிரதேசத்துக்கும் நடந்து போய்ட்டு இருக்காங்க.
நிவாரணம்
வேற வழியில்லை.. பிழைக்க வந்த இடத்திலேயே இருந்தால் பட்டினியால சாவோம் அப்படிங்கிற நிலைமையில இருக்கிறவங்க, அங்கேயே இருக்கிறதை யோசிப்பாங்களா? இல்லை குழந்தைங்களை பசியாற்ற யோசிப்பாங்களா, அந்த மாதிரி கட்டாயங்களில் நிறைய பேர் தள்ளப்பட்டிருக்காங்க.. அவங்களுக்கான நிவாரணத்தை உடனடியா செய்யணும்.. இதை சொல்லும்போது தமிழகத்தில் உள்ள நடைமுறையையும் நான் சொல்லி என் வாழ்த்தை தெரிவிக்கணும்னு நினைக்கிறேன்.
முன்னெச்சரிக்கை
இப்படி தமிழகத்துக்கு வெளியில இருந்து வந்து இங்கே மாட்டிக்கிட்ட பணியாட்களை, தினக்கூலி ஆட்களை ஆங்காங்கே பள்ளிக்கூடங்களில், அரசு பள்ளி கூட வளாகங்களில் கேம்ப் போட்டு தங்க வைச்சிருக்காங்க.. 17 கேம்ப் போட்டிருக்காங்க.. அவங்களுக்கு வேலை, தேவையான சாப்பாடு, தினமும் ஸ்கிரீனிங், பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்தியா முழுக்க கிடையாது.. அது மாநில அரசாங்கங்களின் பொறுப்பு என்பதுடன் சேர்த்து, மத்திய அரசாங்கத்தின் பொறுப்பும் இதுல இருக்கு!!" என்று ஆணித்தரமான தன் கருத்துக்களை நம்மிடம் வைத்தார் கஸ்தூரி!!