ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை கண்டு சிலை போல நிற்பதா.? டிராபிக் போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்
சென்னை: நாட்டின் தலைநகர் டெல்லியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தின்படி அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்கும் போது, தமிழகத்தில் மட்டும் ஏன் இதை செயல்படுத்த இயலவில்லை என அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது சாலை சிக்னல்களில் பதிவான வீடியோ காட்சிகளை அரசு தரப்பு தாக்கல் செய்தது. அந்த வீடியோவை பார்த்த நீதிபதிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.
அந்த வீடியோ காட்சிகளில் 300-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணியாமல் சென்றது பதிவாகியிருந்தது. இதனையடுத்து அரசு தரப்பிடம் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தது.
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை தடுத்து அபராதம் விதிக்காமல் போக்குவரத்து காவல்துறையினர் சிலை போல நின்று வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டினர். விதியை மீறி ஹெல்மெட் அணியாமல் செல்வோரை வேடிக்கை பார்த்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு கட்டாய ஹெல்மெட் விதி தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. ஆனாலும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஏற்படும் பாதிப்புகளை வாகன ஓட்டிகள் முழுமையாக உணரவில்லை.
அவர்களின் அலட்சியத்திற்காக காவல்துறை செயலற்றிருப்பதாக கூற முடியாது என்று குறிப்பிட்டது. ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்படி இல்லையென்றால் உயரதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.