வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ
வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தால் நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை: வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்தால் அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தால் நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து காய்கறி சந்தைகளில் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
வெங்காயத்தை வாங்காமலேயே இல்லத்தரசிகள் கண்ணீர் விடுகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறையின் சார்பில் சென்னை உட்பட மாநகர பகுதிகளில் இயங்கும் பண்ணைப் பசுமை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை தோனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை கடையில் வெங்காய விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயத்தினை வாங்கிச் செல்கின்றனர். நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ வரை வெங்காயம் வழங்கப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, வெங்காயம் அதிகம் விளையும் வட மாநிலங்களில் மழை பாதிப்பினால் தமிழகத்திற்கு வரத்து குறைத்திருப்பதாகவும் இதனால் வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதால் நாசிக், மஹாரஷ்ட்ரா, கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் நியாய விலை கடைகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் தேவைப்படுவதாகவும், ஜனவரி மாதத்தில் இருந்து வெங்காயம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
எகிப்து வெங்காயம் இன்று முதல் சென்னை பசுமை பண்ணை கடைகளில் விற்பனை - இனி கண்ணீர் வராது
திமுக ஆட்சி காலத்திலும் வெங்காயம் விலை 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் விலையை கட்டுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்தால் அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.