வாதாட வக்கீல் இல்லை.. கைது நடவடிக்கையில் விதிமீறல்.. நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத திஷா ரவி
சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலரான 22 வயது மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புறநகர் பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் அதிகரிக்கத் தொடங்கின.
அதில், சர்வதேச சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா துன்பெர்க்கும் ஒருவராகும். அவர் தனது ட்விட்டர் பதிவில் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
டுவிட்டர் பதிவு
ஆனால் கிரெட்டாவின் ஒரு ட்விட்டர் பதிவில் ஒரு டூல்கிட் ஷேர் செய்யப்பட்டது. அதில் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்துவதற்காக எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வாறு நிதி உதவி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆட்சேபகரமான கருத்துகள் கூறப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இந்த ட்விட்டர் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.
டூல் கிட்
இதனிடையேதான் டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இந்த டூல்கிட் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக பெங்களூரு நகரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவி திஷா ரவி, டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது, தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். காலிஸ்தான் தீவிரவாத குழுக்கள் இவருக்கு பின்னணியில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
திஷா ரவி கைது
போலீசார் கைது செய்த விவரத்தை பெங்களூர் காவல்துறையிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. அவர்களாக நேரடியாக வந்து கைது செய்துள்ளனர். மேலும், திஷா ரவி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் யாரும் இல்லை. எனவே அவரே, தனது சார்பில் வாதிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
கண்ணீர் விட்டு அழுத திஷா ரவி
டூல்கிட் உருவாக்கியது, தான் இல்லை என்றும், கிரெட்டா துன்பெர்க் டுவிட்டரில் பதிவு செய்த தகவல்களில் இரண்டு வரிகளை மட்டும் திருத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் அதை வெளியிட்டதாகவும், அழுதபடியே நீதிபதியின் முன்னால் அவர் தெரிவித்தார்.
வழக்கறிஞரே இல்லை
இதனிடையே, திஷா ரவி வழக்கறிஞர், ரெபக்கா ஜான், இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், நீதித்துறையின் எந்த ஒரு வழிகாட்டுதலும், நெறிமுறையும் இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் திஷா ரவிக்காக, வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்ய தவறிவிட்டது.
விதிமுறைகள்
திஷா ரவிக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான ஒரு இளம் பெண்ணுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் சாசனத்தின் 22வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டி இருக்க வேண்டும். விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் இல்லை என்றால்.. ஒன்று.. வழக்கறிஞர் வரும் வரை வழக்கை தள்ளி வைத்திருக்க வேண்டும். அல்லது சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இது இரண்டும் செய்யாமல் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ரிமாண்ட் பெறவில்லை
கேஸ் டைரிகள் மற்றும் அரெஸ்ட் மெமோ நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டதா? பெங்களூரில், திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார், எனவே பெங்களூர் நீதிமன்றத்தில் ரிமாண்ட் பெறப்பட வேண்டும். அது இல்லாமல் நேரடியாக டெல்லி நீதிமன்றத்தில் திஷா ரவி ஆஜர்படுத்தப்பட்டது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியதா? எதுவுமே செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.