உயிருடன் மீண்ட முகிலன்.. யார் பிடியில் இத்தனை காலம் இருந்தார்.. விடை தெரியாத கேள்விகள்!
முகிலன் அளித்த பேட்டியில் சில சந்தேகங்கள் எழுகின்றன
Recommended Video
சென்னை: முகிலன் எங்கே, உயிரோடுதான் இருக்கிறாரா என்ற 6 மாத கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. என்றாலும் முகிலன் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுகின்றன.
தொடர்ச்சியாக ஸ்டெர்லைட், மணல் கொள்ளை, ஜல்லிக்கட்டு, அணுஉலை எதிர்ப்பு போராட்டம், என பொதுமக்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி கார்பரேட் கம்பெனிக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்களை முன் நடத்தியவர் முகிலன்.
இதன்காரணமாக, குண்டர் சட்டம் உள்ளிட்ட பல கேஸ்கள் இவர் மீது போடப்பட்டாலும் சரி, சிறைக்கு பலமுறை அனுப்பினாலும் சரி, போலீஸ் தடியடிகளுக்கு ஆளானாலும் சரி, மக்களுக்கு ஆதரவான இவர் குரல் ஓங்கி ஒலித்து கொண்டே இருந்தது. அதனால்தான் இவர் காணாமல் போன தினத்திலிருந்தே இவருக்கு ஆதரவான குரலை மக்கள் எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
சந்தேகம்
ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக எவ்வாறு போலீசார் திட்டமிட்டு வன்முறை செய்தது என்பதை அம்பலப்படுத்திய தினம்தான் இவர் மாயமானார். அதனால், முகிலனை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ என்ற கேள்விகளும் எழுந்தன. அன்று எழுந்த சந்தேகம்தான் இன்றும் எழுந்துள்ளது.
நொடிந்து போன முகிலன்
மழமழ முகத்தில் பார்த்து பழக்கப்பட்ட முகிலன், தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாமல் முற்றிலும் மாறுபட்டிருந்த பின்னணி என்னவென்று தெரியவில்லை. மிகவும் நொடிந்து போன நிலையில் முகிலன் வெளி உலகத்திற்கு திரும்பியுள்ளது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மனைவி பூங்கொடி
முகிலன் மன்னார்குடி ரயிலில் ஆந்திரா வந்ததாக அம்மாநில ரயில்வே போலீஸார் கூறுகின்றனர். தண்டவாளத்தில் குதிப்பது போல நின்று கொண்டிருந்த முகிலனை மீட்டதாக ஆந்திர போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் வைத்து பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம், முகிலனின் மனைவி பூங்கொடிக்கு தகவல் கொடுத்ததாக தகவல் நேற்று வெளியானது. இதனையடுத்து ஆந்திர போலீஸை தொடர்பு கொண்டு தமிழக போலீஸார் கைதானது முகிலன் தான் என்பதை உறுதி செய்து அழைத்து வந்துள்ளனர்.
கடத்தப்பட்டாரா?
எனவே முகிலன் மீட்கப்பட்டதில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான முகிலன் இத்தனை நாட்களாக எங்கிருந்தார், எதற்காக அவர் மன்னார்குடி ரயிலில் திருப்பதி செல்ல வேண்டும், தாடியுடன் மிக மெலிந்த உடலோடு அவர் இருக்க காரணம் என்ன, அவர் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளானாரா, அப்படியானால் அவரைக் கடத்தி வைத்திருந்தது யார் என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
மனநலம் பாதிப்பு?
அதேபோல, காட்பாடி ரயில் நிலையத்தில் போலீசாரின் கடும் கெடுபிடிக்கு மத்தியில் பேட்டியளித்த முகிலன், "என்னை கடத்திட்டு போறாங்க.. என்னை போலீசார் மனநலம் பாதிக்கப்பட வைத்துவிட்டனர்" என்று குற்றஞ்சாட்டுகிறார். முகிலனின் இந்த 2 வரிகள் மனதை போட்டு பிசைகின்றன. மன நலம் பாதிக்கப்படும் அளவுக்கு என்ன மாதிரியான சித்திரவதைகளுக்கு அவர் ஆட்பட்டார் என்ற கேள்வியும் எழுகிறது.
விடை வெளி வருமா?
முகிலன் உயிருடன் மீண்டுள்ளார் என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.. ஆனால் இத்தனை மாதம் எங்கிருந்தார். யார் பிடியில் இருந்தார் என்ற பல கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது. விடைகள் வெளியே வருமா என்பதுதான் ஆயிரம் டாலர் கேள்வி. நீதிமன்றத்தின் மீதுதான் அத்தனை பேரின் நம்பிக்கைப் பார்வையும் தற்போது திரும்பியுள்ளது.