நீட் எனும் கொடூரன் இன்னும் எத்தனை தமிழ் பிள்ளைகளை பலியெடுக்கப் போகிறானோ?
Recommended Video
சென்னை: நீட் எனும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு அடுத்தடுத்து ஆண்டுதோறும் தமிழ்ப் பிள்ளைகளை பலியெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மனித பேரவலத்துக்கு எப்போதுதான் யார்தான் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்களோ?
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்து நல்ல மதிப்பெண் பெற்றாலும் கூட நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும்.
இதனால்தான் ஏழ்மையிலும் போராடி படித்து நல்ல மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா, நீட் கொடுங்கரத்துக்கு தம்மையே ஆகுதியாக்கி முதல் பலியாகிப் போனார். அனிதாவைத் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தியவர்கள் கொடுத்த உளைச்சலில் தமிழகத்தில் உயிர் பலி தொடர்ந்தது.
கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா.. பரபரப்பான எதிர்பார்ப்பில் தமிழகம்!
மூன்று பிஞ்சு பிள்ளைகள் பலி
இப்போது இளம் பிஞ்சுகள் மூன்று பேர் தமிழ்நாட்டு மண்ணில் மாண்டுபோயிருக்கிறார்கள். நெஞ்சமெல்லாம் பதை பதைக்க பிள்ளைகளை நீட் தேர்வு எழுத வைத்த பெற்றோர் நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. நம் பிள்ளையும் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வதோ? என பித்து பிடித்தவர்களாகிக் கொண்டிருக்கிறார்.
அரசியல் சட்ட திருத்தம்- எரிப்பு
இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பு சட்டத்திலே முதலாவது திருத்தம் கொண்டு வர போராடிய பெருமைக்குரிய பெருமண் இந்த தமிழ் நிலம். சாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தையே எரித்து பத்தாயிரம் பேருக்கும் அதிகமாக சிறைக்களம் புகுந்த வரலாற்றுக்குரியதும் இந்த மண்தான்.
ஒப்பாரி குரல்
இப்படி சமூக நீதி, மாநில உரிமைகளில் இம்மியும் விட்டுக்கொடுக்காமல் இந்திய அரசையே போராட்டங்கள் எனும் சாட்டையடிகளால் சுழல வைத்த தேசம்தான் இப்போது நீட்டை ஒழிக்க முடியாமல் ஒப்பாரி வைக்கிறது. ஜல்லிக்கட்டு எனும் கலாசார அடையாளத்துக்காக உலகையே உலுக்கிய புரட்சிக்கு சொந்தக்காரர்கள் நாம்.
ஓயாத அழுகுரல்
ஆனால் நம்மால் நாம் விரும்பாத ஒரு நுழைவுத் தேர்வு என்ற கொடூரனை நம் நிலத்தில் இருந்து விரட்டிய முடியாத விரக்தியற்றவர்களாகிக் கிடக்கிறோம். விதியே! விதியே! என் தமிழ்ச்சாதியை என்ன செய்யப் போகிறாயோ? என விம்மி விம்மி வீட்டு முற்றத்தில் அழுது வடியும் வீங்கிய கண்களோடு விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஜனநாயகத்துக்கு பேராபத்து
ஆள்வது மக்களுக்கான அரசு என்றால் அந்த மக்கள் விருப்பத்துக்கு எதிரான மக்களை சாவு குழிக்குள் தள்ளுகிற நடைமுறைகளை புறந்தள்ளி குப்பையில் போடத்தான் வேண்டும்.. நீ செத்தாலும் பரவாயில்லை.. என சட்டாம்பிள்ளைத்தனம் பேசுவது ஜனநாயகத்துக்கு பெருங்கேடும் பேராபத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணரத்தான் வேண்டும்.
மூர்க்கமாய் போராடுங்கள்
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக சண்டமாருதமாய் முழங்கிய சகல கட்சியினரும் வீட்டுக்கு வீடு எழவை கொண்டு வந்து சேர்க்கும் நீட் எனும் கொடூரனுக்கு கொள்ளி வைக்க மூர்க்கமாய் போராடுவதில் என்னதான் தயக்கமோ? அனிதாக்களும் மோனிஷாக்களும் தொடர் கதையாகாமல் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் ஆயிரமாயிரம் பெற்றோரின் ஆறாத துயரின் வழி முன்நிற்கும் வேண்டுகோள்.