2022 நினைவுகள்: தனித்தே களமாடும் சீமான்! அதிரடி பேச்சுகளும்..கள அரசியலும்! உங்கள் பார்வையில் எப்படி?
சென்னை : 2022 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில் இத்தனை ஆண்டுகளாய் தமிழக அரசியல் களத்தில் தனித்து பயணம் செய்து வரும் நாம் தமிழர் சீமானுக்கு ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கிறது. தேர்தல் அரசியல் தமிழ் தேசியம் என அதிரடி காட்டும் அவர் 2022 ஆம் ஆண்டில் என்ன செய்திருக்கிறார்?
இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடாத ஒரே கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். அதே நேரத்தில் தொடர் தோல்விகளால் அந்தக் கட்சி துவண்டு போயிருக்கிறது.
கடந்த சில நாட்களாக திமுகவை விமர்சிப்பதில் மென்மையான போக்கை நாம் தமிழர் கட்சி கையாண்டு வருவதாகவும். குறிப்பாக ஸ்டாலின் மீது இருப்பது 'செல்லக் கோபம்' என கூறியிருப்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியது இல்லை.
6-வது விரலான ஆளுநர் எதற்கு? நமக்கு 5 விரல் போதுமே..வெட்டி எறிந்துவிடுவோம்: சீமான் ஆவேசம்
சீமான்
இதனால் ஒருவேளை கூட்டணி ஏற்படலாம் என்கின்றனர். ஆனால் நாம் தமிழர் திமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இருக்கும் சில கட்சிகள் தொடர்ந்து திமுக கூட்டணியில் சேர வேண்டும் என ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் தேர்தல் பல ஆச்சரியங்களுக்கும் அதிரடிகளுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தேர்தல் அரசியல் அல்லாமல் மக்களுக்காகவும், மொழிக்காகவும் 2022ஆம் ஆண்டில் சீமான் பல சம்பவங்களை செய்திருக்கிறார்.
நாம் தமிழர்
கடந்த 2009 ஆம் ஆண்டு நாம் தமிழர் இயக்கத்தை மதுரையில் தொடங்கினார் சீமான். அடுத்த ஆண்டே மே மாதம் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தது. தேர்தல் அரசியலில் நுழைந்ததில் தொடங்கி தற்போது வரையில் தனித்துப் போட்டி என்ற புள்ளியில் இருந்து சீமான் மாறாமல் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் கணிசமாக உயர்ந்தும் வருகிறது. குறிப்பாக, இளைஞர்களிடத்தில் அக்கட்சி வலுவாக சென்றடைந்துள்ளது.
மொழி பிரச்சினை
நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, நம் சொந்த மொழிக்கு உயிரானவர்கள். இந்தியை எதிர்த்து நமது போராட்டம் அல்ல, கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். அதை ஒவ்வொருவரும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து பேசி வருபவர் சீமான். இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம் அதிகளவு நடைபெற்றிருக்கிறது. தினந்தோறும் அறிக்கைகள் வாயிலாக இந்தி திணிப்புக்கு எதிராக பேசி வந்திருக்கிறார். தொடர்ந்து நவம்பரின் கூட நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப் பிரம்மாண்ட ஆர்ப்பாடம் நடத்தப்பட்டது.
நதிநீர் விவகாரம்
மொழிப் பிரச்சனை போன்றே நதிநீர் பிரச்சினைகளிலும் விவசாய பிரச்சினைகளிலும் நாம் தமிழர் சீமான் தீவிர கவனம் செலுத்தி வந்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டிலிருந்து அவர் சார்பாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக காவிரி உரிமை பிரச்சினை, மேகதாது விவகாரம், தாமிரபரணி ஆற்று மணல் கொள்ளை, கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கற்கள் எடுப்பது, பாலாற்றில் மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் தமிழர் சீமானும் அவரது கட்சியினரும் தொடர்ந்து களமாடி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு இருக்கிறது.
மீனவர்கள் போராட்டம்
மீனவர்கள் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி சீமானின் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஏராளமான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக இலங்கை கடற்படை தாக்குதல், ஒகி புயலின் போது மீனவர்கள் மரணம் அடைந்தது உள்ளிட்ட விவகாரங்களில் நாம் தமிழர் சீமானின் போராட்டங்கள் மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்களும் அணுக்கழிவு மையம், வன பாதுகாப்பு சட்ட திருத்த வரைவு உள்ளிட்ட விவகாரங்களை மீனவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் சீமான் பல நேரங்களில் களத்தில் நின்று போராடி இருக்கிறார்.
வட மாநில தொழிலாளர்கள்
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிக அளவில் குவிந்து வருவது குறித்து மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்து வருபவர்களில் சீமானும் ஒருவர். பீகார் உத்திரபிரதேசம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் தமிழகத்திற்கு சாரைசாரையாக வட மாநிலத் தொழிலாளர்கள் படையெடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள நபர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதோடு குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் வட மாநில தொழிலாளர்கள் வருகை குறித்து கணக்கெடுக்க வேண்டும் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் கண்காணிக்க வேண்டும் என தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு எதைக் கொடுத்தாலும் வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்பது சீமானின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
உங்கள் கருத்து
இது மட்டுமில்லாமல் தமிழர் உரிமை, மத்திய பாஜக எதிர்ப்பு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட தமிழக விவகாரங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வந்திருக்கிறார் சீமான். அதிரடி பேச்சுகள், ஆவேச உரைகள், கண்டன அறிக்கைகள் என அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தாலும் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை சிறிது சிறிதாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி இதுவரை ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட பெறவில்லை. அது வரும் ஆண்டுகளில் ஆவது கை கூடுமா? நாம் தமிழர் சீமான் இது தவிர வேறு செய்த சாதனைகளாக நீங்கள் பார்ப்பது உள்ளிட்ட கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்..