கஜா புயல் நிவாரணத்திற்கு.. நடிகர் அஜீத் ரூ. 15 லட்சம் நிதி!
நடிகர் அஜீத் ரூ.15 லட்சம் நிவாரண நிதியாக அளித்தார்
சென்னை: கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜீத் 15 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
ஒரு சுழட்டு சுழட்டி விட்டு போன கஜாவால் இன்னும் தமிழகம் மீளவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் வீடு, வாசல், தோப்பு, நிலபுலன்கள் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறார்கள்.
ஒரு பக்கம் மீட்பு பணிகள் தொடர்கின்றன, மற்றொரு பக்கம் நிவாரண உதவிகள் சேர்கின்றன. எனினும் பாதிப்படைந்த மக்கள் மீண்டு வர காலம் பிடிக்குட் என்று சொல்கிறார்கள்.
முதல்வர் வேண்டுகோள்
புயல் பாதிப்பு குறித்து டெல்லி சென்று பிரதமரிடம் விளக்கி விட்டு, நிதியுதவி கோரினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆன்லைன் உதவி
இதையடுத்து, பொதுமக்கள் கஜா புயல் பாதிப்புக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதவி நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்த உதவியை மக்கள், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கொடுத்து வருகிறார்கள்.
நடிகர்கள் உதவி
அதேபோல தொழிலதிபர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். திரைத்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, கஸ்தூரி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் நிவாரண பொருட்களையும் நிதியுதவியையும் அறிவித்துள்ளனர்.
அஜித் வழங்கினார்
இந்த நிலையில், நடிகர் அஜீத் 15 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு வழங்கினார். இதுவரை முதலமைச்சரின் கஜா புயல் நிவாரண நிதியில் ரூ. 13.32 கோடி வரை சேர்ந்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.