உலகின் உயர் சாதி பிராமணர்.. ஐயர், ஐயங்கார் சண்டை வேணாம்! நமக்கு “பெஸ்டு” மூளை - பெருமை பேசிய பாஸ்கி
உலகத்திலேயே அறிவார்ந்த சமூகம் பிராமணர்கள்தான் என்று நடிகர் பாஸ்கி தெரிவித்து இருக்கிறார்
சென்னை: உலகத்திலேயே அறிவார்ந்த சமூகம் பிராமணர்கள்தான் என்றும், படைப்பாற்றலில் உலகத்திலேயே உச்சநிலையில் பிராமணார்களே உள்ளதாகவும் நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான பாஸ்கி தெரிவித்து இருக்கிறார். ஐயர், ஐயங்கார் என்று பிராமணர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.
சென்னை சேர்ந்தவர் நடிகர் பாஸ்கி. தூள், சிவகாசி, பொய் சொல்லப் போறோம், அம்புலி, தில்லு முல்லு, தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்து இருக்கிறார்.
இது அல்லாமல் கிரிக்கெட் வர்ணனையாளர், ஸ்டாண்ட் அப் காமெடியன், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், சினிமா விமர்சகர், வானொலி தொகுப்பாளர் என்று பன்முகங்களில் மக்கள் மத்தியில் பரிட்சையமானவர் பாஸ்கி.
பிராமினுக்கு சிறந்த மூளை
கோவையில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கருத்தரங்கில் கலந்துகொண்டு பிராமணர்கள் குறித்து உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அந்த வீடியோவில், "பிரம்மன், பிராமின் என்று சொல்வார்கள் படைப்பாற்றலுக்கு. இவ்வளவு மூளைகள் இங்கு இருக்கிறது. உலகத்தின் சிறந்த மூளைகள் இங்கு இருக்கிறது.
பிராமணர்கள்தான் உலகின் சுப்ரீம்
பிராமின், பிரம்மன் ஆகிய இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று நானும் நினைக்கிறேன். உலகத்தில் படைப்பாற்றலுக்கு பெயர்போனது பிராமண சமுதாயம். உலகத்திலேயே பிராமண சமுதாயம்தான் உச்சநிலையில் இருக்கும் சமுதாயம். அதில் எந்த ஒரு சந்தேகமும் எனக்கு இல்லை. நிறைய விசயங்கள் பேச வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் நகைச்சுவையை விட்டுவிடவே கூடாது.
நான் ஐயர், மனைவி ஐயங்கார்?
அதை சொல்வதற்கு முன்னாடி, நான் ஐயர், ஐயங்கார் என்று சொன்னேன் அல்லவா? சின்ன சின்ன விசயங்களில் நமக்குள் சில தவறான புரிதல்கள் வருகின்றன. என் மனைவி கார்ட்டூனிஸ்ட் மதனுடைய சகோதரி. நான் ஐயர். அவர் ஐயங்கார். 'ஏய் நான் கிடைத்ததற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
யார் சிறந்தவர்?
நான் சொல்வேன் '2 உதாரணங்களை உனக்கு கொடுக்கவா? பிறந்ததில் இருந்தே சென்னை மயிலாப்பூரில் இருக்கிறேன். யாராவது ஒரு ரிக்ஷாகாரர் என்னை பார்த்தால்கூட என்ன ஐயரே.. எங்கே போகனும் என்று சொல்வார். ஐயங்கார் என்று சொல்லவே மாட்டார். இது ஜோக்தான். அதே சமயத்தில் வசந்தி யாராவது ஏமாற்றிவிட்டால், நல்லா போட்டானா நாமம் என்று சொல்வார்கள். நல்லா விபூதி போட்டானா என்று சொல்ல மாட்டார்கள்' என்றேன்.
சண்டை வேண்டாம்
இது பெரிய ஜோக்கா? எங்க அண்ணன் போட்ட பிச்சையினால்தான் நீ நகைச்சுவை கலைஞராகவே ஆனாய். ஐயங்கார்தான் கிங்கு.' இப்படி ஜாலியாக போகும். நான் சண்டை போட மாட்டேன். ஏன் சொல்கிறேன் என்றால், உலகின் மிகவும் அறிவார்ந்த சமுதாயமாக இருந்துவிட்டு, இப்படி ஒரு மூளையை வைத்துக்கொண்டு நமக்குள் சண்டை வரக்கூடாது என்பது என்னுடைய உணர்வு.
|
சாதி பெருமை தேவையா?
எனவே நாம் பிராமிண் கம்யூனிட்டி என்று அழைக்கப்பட வேண்டும். கம்மி யூனிட்டி இருந்துவிடக்கூடாது." என்றார். சாதியின் காரணமாக சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வால் தீண்டாமை போன்ற சமூக ஒடுக்குமுறைகளும், குற்றங்களும் தொடர்ந்து வரும் சூழலில் மக்களால் நன்கு அறிமுகமான பாஸ்கி இப்படி சாதிப்பெருமை பேசலாமா என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.