48 மணி நேரத்தில் கார் நுழைவு வரியை செலுத்தியாக வேண்டும்.. நடிகர் தனுஷுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி நிலுவைத்தொகை 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்த்து.
ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வணிக வரித்துறை உத்தரவு
60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.
தொழில் என்ன
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார். என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என கேள்வி எழுப்பினார்.
உங்கள் நோக்கம் என்ன?
2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
பால்க்காரர் வரி கட்டுகிறார்
ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்க்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார். உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் படி நடக்கும்படி அறிவுறுத்தினார்.
மதியம் வரை தள்ளி வைத்தார்
நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவிற்காக மதியம் தள்ளிவைத்தார். அதன்படி, வணிக வரித் துறை தரப்பில் தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தனுஷ் தரப்பில், கொரோனா காலம் என்பதால் திங்கட்கிழமைக்குள் இந்த தொகையை செலுத்திவிடுவதாக உறுதி அளிக்கப்பட்டது.
தனுஷ் கோரிக்கை டிஸ்மிஸ்
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மின்னணு பரிவர்த்தனையிலேயே நிலுவை வரியை செலுத்தபோவதால் 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை வாபஸ் பெறும் தனுஷின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தார். பின்னர், நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான் என குறிப்பிட்டார். பின்னர், மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லை என்றால் அதை ஏற்க கூடாது என்ற உயர் நீதிமன்ற விதிகளை பின்பற்றாத பதிவுத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விஜய் மாதிரியே
ஏற்கனவே இதே போன்ற காருக்கு, இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு இதே நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்கவேண்டும் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இப்போது நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிட்டத்தட்ட நடிகர் விஜய்க்கு எந்த மாதிரியான அறிவுரைகளை வழங்கினாரோ அதேமாதிரி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதே மாதிரி அட்வைஸ்
விஜய்க்கு எந்த மாதிரி அறிவுரைகளை வழங்கினாரோ அதே போன்ற அறிவுரைகளை தனுஷுக்கும், நீதிபதி வழங்கியுள்ளார். குறிப்பாக விஜய்க்கு மனுவில் வேலை அல்லது தொழிலை குறிப்பிடாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நீதிபதி. தொழிலை குறிப்பிட வேண்டிய அவசியமில்லையா? என கேள்வி எழுப்பினார். இதே கேள்வி விஜய்க்கும் எழுப்பப்பட்டது. ஏனெனில் விஜயும், நடிகர் என்பதை தனது மனுவில் குறிப்பிடவில்லை என்பதை நீதிபதி இதே மாதிரி சுட்டிக் காட்டியிருந்தார்.
தொழிலை குறிப்பிடாத விஜய், தனுஷ்
மனுதாரர் செய்யும் தொழிலை மறைத்தது ஏன்? என விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். நடிகர் விஜய்யும் ரோல்ஸ் ராய்சில் கோஸ்ட் என்ற வகை காரைத்தான் வாங்கியிருந்தார். தனுஷும் அதே வகை கார்தான் வாங்கியுள்ளார். இந்த கார்தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் சற்று விலை குறைவான கார் என்பதால், இந்தியாவைச் சேர்ந்த பல பிரமுகர்களும் கோஸ்ட் வகை கார்களைத்தான் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித்தான் தனுஷும் வாங்கியுள்ளார்.
அபராதம் விதிப்பு
விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கில் இதேபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரது மனுவை தள்ளுபடி செய்து ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார் நீதிபதி. நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்பது விஜய் வழக்கில் நீதிபதியின் கருத்தாக இருந்தது. விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய நிலையில், அபராத தொகையை நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டதற்கு தடை விதிக்க விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.