46 வயதான நடிகர் ஜே.கே. ரித்தீஷ் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
நடிகரும், முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இன்று காலமானார்
Recommended Video
சென்னை: பிரபல திரைப்பட நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்தீஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 46.
முரட்டு மீசையுடன் சினிமாவில் காலடி வைத்தபோதே புகழுடன் வந்தவர் ரித்தீஷ். சிறிது நாளில் புரட்சி நாயகன், அதிரடி மன்னன் என்ற அடைமொழிகளோடு வலம் வந்தார்.
தன்னை அடையாளப்படுத்தி கொள்ள எத்தனையோ விதமான விளம்பரங்களை செய்து கொண்டாலும், கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுப்பவர் என்ற பெயரையும் பெற்றவர்.
அரசியல், சினிமாவில் கடுமையாக உழைத்தவர்.. உதவிக் கரம் நீட்டுபவர் ரித்தீஷ்!
திமுக எம்பி
இன்னும் சொல்லப்போனால் கோடம்பாக்கத்தின் கொடைவள்ளல் என்று கூட இவரை சொல்வார்கள். அதேபோல அரசியலிலும் இவர் கால் பதித்தார். திமுக, அதிமுக என இரண்டிலுமே உள்ளே நுழைந்து ஒரு கலக்கு கலக்கினார். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ராமநாதபுரம் எம்பியாகவும் உயர்ந்தார் ரித்தீஷ்! அதன் பிறகு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளராக செயல்பட்டவர், பிறகு திமுக-வில் இருந்து விலகி 2014ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.
பினாமி
அதனால்தான் இவர் அனைவருக்கும் மறைமுகமாக உதவி செய்தபோதுகூட, முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் பினாமியாக இருந்தபோது கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டுதான் இப்படி தண்ணீராக செலவழிக்கிறார் என்று கூறப்பட்டது.
சிகிச்சை
கடந்த 2016-ம் ஆண்டிலேயே ரித்தீஷூக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளிவந்தது.
மாரடைப்பு
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் சென்றிருந்ததாக தெரிகிறது. அவரது வீட்டில் இன்று மதிய உணவு சாப்பிட்ட ரித்தீஷ் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் ராஜன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பெரும் அதிர்ச்சி
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ரித்தீஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரித்தீஷை வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் வீட்டுக்குப் போன பின்னர் அவருக்கு இதயத் துடிப்பு இருந்ததைத் தொடர்ந்து அவரை கனகமணி மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குடும்பம்
ரித்தீஷ் மாரடைப்பால் காலமான செய்தி அறிந்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் வேதனையில் ஆழ்ந்துள்ளன. ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர்.