ஜெயகோபால் கைது.. சந்தோஷப்படுவதை விட நிம்மதி பெருமூச்சு.. கமல் ஹாசன் பேட்டி
சென்னை: நடிகர் கமல் ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில். பேனர் விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டு இருப்பது சந்தோஷப்படுவதை விட நிம்மதி பெருமூச்சு என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
ஆறுதல் தந்திருக்கும்
அதற்கு பதில் அளித்த கமல் ஹாசன், ஜெயகோபால் கைது பற்றி சந்தோஷப்படுவதை விட நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது. ஜெயகோபால் கைது மூலம் நீதி கிடைத்துள்ளது. ஜெயகோபால் கைது சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் தந்திருக்கும் என்றார்.
அரசியல் வேண்டாம்
எனது நண்பர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டாம் என்றும், அரசியலில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும் நடிகர் சிரஞ்சீவி கூயிருக்கிறாரே அவரது கருத்துக்கு உங்கள் பதில் என்ன என்று செய்தியாளர்கள் கமலிடம் கேட்டனர். அதற்கு அவர், நாடாளுமன்ற தேர்தல் என்பது எங்களுக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முனைப்பும் பயிற்சியும் கிடைத்தது.
கமல் ஹாசன் பதில்
அரசியலுக்கு வர வேண்டாம் என நடிகர் சிரஞ்சீவியின் கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அப்படி ஏற்பேன். இதற்கு நல்ல பதிலாக கவிஞர் கண்ணதாசன் கூறியதை கூற வந்தவனை கேட்டால் சென்றுவிடு என்பார், சென்றவனை கேட்டால் வந்துவிடு என்பார் எனவே அவர் அரசியலில் சென்றுவிடு என்ற அறிவுரையை கூறவில்லை. அரசியலில் வேறு சென்றவரை கேட்டு முடிவு செய்வோம் என்றார்.
நடிகர் கமல் பதில்
பகவத் கீதை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாடமாக்கப்படுகிறதே உங்கள் கருத்து என்ன என்று கமலிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கமல், பகவத் கீதை நல்ல புத்தகம் அதை வாங்கி படிக்கலாம். கோயில்களில் கிடைக்கிறது. ஆசிரமங்களில் கிடைக்கிறது இன்னும் பல இடங்களில் கிடைக்கிறது. அதை விரும்புவர்கள் வாங்கி படிக்கலாம். அதை கட்டாயம் பாடமாக்க வேண்டிய தேவையில்லை என்றார்.