இயற்கை விவசாயத்தை ஆதரிப்போம்.. அதுதான் நெல் ஜெயராமனுக்குரிய சரியான மரியாதை.. கார்த்தி
இயற்கை உணவுகளையே நாம் உண்ண வேண்டும் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: இயற்கை விவசாயத்தை ஆதரித்து அங்கீகரிப்பதுதான், நெல் ஜெயராமனுக்குச் நாம் செய்யும் உண்மையான மரியாதை" என்று நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இயற்கை விவசாயத்துக்காக பாடுபட்ட நெல் ஜெயராமன் இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, இயற்கை விவசாயத்தின் மீதான புரிதலை மக்களிடையே ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன் என்று புகழாரம் சூட்டினார்.
விழிப்புணர்வு
கார்த்தி சொன்னதாவது: "நெல் ஜெயராமன் விவசாயத்துக்காகப் போராடியவர். இயற்கை விவசாயத்தின் மீதான புரிதலை ஏற்படுத்தியவர். அது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தியவர். இயற்கை விவசாயத்துக்காகவே தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.
இறுதி சடங்கு
எப்படி விவசாயம் செய்யணும் என்று ஓடி ஓடி அவர் வேலை பார்த்தவர். இப்படி நம் மக்களுக்காகவே பொதுநலத்தோடு வாழ்ந்தவருக்கு தமிழகமே மரியாதை செலுத்த செய்ய வேண்டும். இதுபோன்றவர்களின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வது முக்கியமானதாக நான் நினைக்கிறேன்.
கீரை பயிரிட்டு தா
நாம ஞாபகத்தில் வைத்து கொள்வது, அவர் நமக்கு சொன்ன, "இயற்கை உணவாக சாப்பிடுங்கள்" என்பதுதான். 5 ரூபாய்க்கு விற்கப்படும் கீரையை 2 ரூபாய்க்கு தருகிறாயா என்று கேட்காமல், 7 ரூபாய் கூட தருகிறேன். இயற்கை விவசாயத்தால் கீரை பயிரிட்டு தா என்று கேளுங்கள் என்று சொல்லுவார் நெல் ஜெயராமன்.
உண்மையான மரியாதை
எனவே நாமும் இப்படியெல்லாம் பேரம் பேசாமல், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், கூடுதல் விலையானாலும் வாங்கி இயற்கை விவசாயத்தை ஆதரித்து அங்கீகரிப்பதுதான், நெல் ஜெயராமனுக்குச் நாம் செய்யும் உண்மையான மரியாதை" என்றார்.