தீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு! புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்
சென்னை: புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தீரமிக்க போராட்டம் பிரம்மிப்பூட்டுகிறது; புதிய சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று உழவன் பவுண்டேசன் நிறுவனரான நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் கார்த்தி இன்று வெளியிட்ட அறிக்கை: நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் 'உழவர்' என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெலியில் போராடி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்!
போராட்டத்தில் பெண்கள்
விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாக பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.
தீரத்துடன் போராட்டம்
நாளும் பொழுதும் பாடுபட்டால்தான் வாழ்க்கை என்ற நிலையில் மாடு, கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு குடும்பத்தாரை பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.
விவசாயிகளின் கோரிக்கை
தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளை பொருட்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மோசமாக பாதிப்படைவோம் என கருதுகிறார்கள். தங்கள் மண்ணில் தங்களுக்கிருக்கும் உரிமையும் தங்கள் விளைப் பொருட்கள் மீது தங்களுக்கிருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும் ஆகவே இந்த சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
வாபஸ் பெற்றிடுக
ஆகவே போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்தை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு. அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.