தேர்தலுக்கு தேர்தல் மட்டும் வெளியில் வந்து ஆதரவு கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவது அழகா கார்த்திக்?
சென்னை: மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை உருவாக்கினார். பின்னர் அதை பார்வார்டு பிளாக் கட்சி என பெயர் மாற்றம் செய்து சிறிது காலம் அரசியலில் இருப்பதாக பாவலா காட்டிக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி பார்வார்டு பிளாக் கட்சியையும் கலைத்துவிட்டு மனித உரிமை காக்கும் கட்சி என பெயர் வைத்தார்.
விலகிய கார்த்திக்
அப்போது அவர் பேட்டியளிக்கையில் இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபகாலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன்.
டஃப்
அதற்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான் காரணம். இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். இதை அறிவித்தவுடன் சரி அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
விருப்பம்
ஆனால் அவரோ வழக்கம் போல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என அறிவித்துள்ளார். அத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த கார்த்திக் தனது விருப்பதையும் தெரிவித்துள்ளார்.
பிரசாரம்
இதே போல் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் அதிமுக ஆதரவு தெரிவித்தார் கார்த்திக். அப்போது சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் அறிவித்திருந்தார்.
நடிக்க போங்க கார்த்திக்
யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதை கூட கட்சியினருடன் விவாதிக்காமல் தான்தோன்றித்தனமாக இவராகவே ஒரு முடிவை எடுத்திருப்பது அவரது கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது கிடையாது, பொதுக் கூட்டம் கிடையாது, ஆர்ப்பாட்டம், போராட்டம் கிடையாது, கண்டன கூட்டம், டுவிட்டரில் கூட ஒரு கண்டனம் கிடையாது. இதற்கு பதில் இவர் கட்சியை கலைத்து விட்டு சினிமாவில் நடிக்க போய்விடலாமே!