'அண்ணே இந்தாங்க..இதை வைச்சு பொண்ணு கல்யாணத்தை நடத்துங்க'.. விவேக் பேருதவி.. தழுதழுத்த குமரிமுத்து
சென்னை: தனது மகளின் திருமணத்திற்கு விவேக் செய்த உதவி பற்றி, சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரி முத்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சின்ன கலைவானர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக்கிற்கு (59) நேற்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி நிலையில் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
எக்மோ கருவி பொருத்தப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது
Actor Vivek: தகனமேடையில் தந்தையை தொட்டு பார்த்து அழுத மகள்.. கற்பூரம் ஏற்றி இறுதி சடங்கு செய்தார்!
இரங்கல்
மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தமிழக அரசு சார்பில் அவரது உடல் முழு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. நடிகர் விவேக்கின் பழைய நேர்காணல்கள், பேச்சுகள், அவரது புகழ்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றைப் பகிர்ந்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து நடிகர் விவேக் தனக்குச் செய்த உதவி குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் குமரிமுத்து கூறுகையில், "நான் துணிந்து சொல்லுவேன். இதற்காக யார் என் மீது கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை, விவேக்கைப் போல மிகச் சிறந்த ஒரு மனிதனைப் பார்ப்பது அரிது.
குமரி முத்து பேச்சு
எனது கடைசி மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது என்னிடம் போதுமான பணம் இல்லை. எனக்குப் பொருளாதார சிக்கல் இருந்தது. அப்போது இலங்கையில் நாடகம் போட அழைத்திருந்தனர். இது தொடர்பாக நான் தம்பி விவேக்கிடம் பேசினான். இதில் நடித்தால் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் இது எனது மகளின் திருமணத்தை நடத்த உதவிகரமாக இருக்கும் என்றும் அவரிடம் கூறினேன்.
இரண்டு லட்ச ரூபாய்
அப்போது அவர் எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டார். நான் இரண்டு லட்ச ரூபாய் வாங்கி தருகிறேன் என்றேன். இதையடுத்து அவர் இலங்கையில் நாடகம் நடத்த ஒப்புக்கொண்டார். அங்கு நாடகம் முடிந்த மறுநாளே எனக்கு நாடக அமைப்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் அளித்தார்கள். பின்னர், விவேக்கிற்குப் பணம் கொடுக்க, நானும் நாடக அமைப்பாளர்களும் அவரது அறைக்குச் சென்றோம்.
அவர் தான் மனுஷன்
நாடக அமைப்பாளர்கள் அவருக்கு இரண்டு லட்ச ரூபாயை அளித்தார்கள். மறுகணமே, அந்த இரண்டு லட்ச ரூபாயை விவேக் என்னிடம் கொடுத்தார். "அண்ணே.. இந்தாங்க அண்ணே. 2 லட்ச ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள். உங்க பொண்ணு கல்யாணத்துக்கு கஷ்டப்படுகிறேன் என்றீர்களே. உங்களுக்கு 50 ஆயிரம் கொடுத்துவிட்டார்களா. பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்க அண்ணே" என்றவர் விவேக்" என்று கண்ணீர் ததும்பத் ததும்ப தெரிவித்தார். மேலும், கலைவாணருக்குப் பிறகு விவேக் தான் சிறந்த நடிகர் சிறந்த மனிதன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்,