தமிழக அரசு மீது எனக்கு வருத்தம் உண்டு... சாபத்துக்கு ஆளாகாதீங்க... நடிகர் மயில்சாமி ஆக்ரோஷம்..!
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மீது தனக்கு மிகப்பெரிய வருத்தம் உள்ளதாக நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சாபத்தை சம்பாதிக்க வேண்டாம் என மத்திய மாநில அரசுகளை அவர் எச்சரித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி போராட்டம் நடத்தி வரும் மக்கள் பாதை அமைப்பினரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.
பாஜகவின் பாதுகாப்பு வளையத்திற்குள் முதல்வர்... விவசாயிகளிடம் மன்னிப்பு கோருக - ஸ்டாலின் பாய்ச்சல்
தைரியமாக குரல்
சமூக பிரச்சனைகள் குறித்து யாருக்கும் அஞ்சாமல், தயங்காமல் குரல் கொடுக்கும் நடிகர்களில் மயில்சாமியும் ஒருவர். ஜல்லிக்கட்டு தொடங்கி நீட் தேர்வு வரை தனது கருத்தை சமரசமின்றி பொதுவெளியில் வைத்து வருகிறார். படங்களில் நடித்தோமா கல்லாவை கட்டினோமா என்று மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனைகளில் அக்கறை கொண்டு அது தொடர்பான தனது வாதத்தை ஊடக விவாதங்களிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் முன் வைக்கக்கூடியவர்.
மயில்சாமி ஆவேசம்
அந்த வகையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தி வரும் மக்கள் பாதை அமைப்பினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வந்த அவர் மத்திய மாநில அரசுகளை விளாசித் தள்ளிவிட்டார். பதவி இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்காதீர்கள் என்றும் சாபத்துக்கு ஆளாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
தென்னிந்தியன்
இதுவரை இந்தியன் என்று கூறியது போதும் என்றும் இனி நாம் தென்னிந்தியன் எனக் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார். தாம் எந்தக் கட்சியையும் சேராதவன் என்றும் தனக்கு கட்சி சாயம் பூச வேண்டிய தேவையில்லை எனவும் கூறினார். மக்கள் பாதை அமைப்பினர் நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தை கலைக்க சிலர் முயற்சி செய்து வருவதாக சாடினார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.
மத்திய அரசு எதைக் கூறினாலும் அதை கண்களை மூடிக்கொண்டு ஆதரித்து கையெழுத்து போடக் கூடிய இருவர் தமிழகத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தார். ஆட்சி, அதிகாரம் இருக்கிறது நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்றும் மட்டும் எண்ண வேண்டாம் என்றும் பெற்றோர்களின் சாபத்துக்கு ஆளாக வேண்டாம் என்பதே தனது கோரிக்கை என்றும் தெரிவித்தார் மயில்சாமி.