அரசியல் நமக்கு சரிப்பட்டு வராதுப்பு.. சிவாஜி விட்டு சென்ற பாடம்.. மறப்பாரா பிரபு?
காங்கிரசில் இணைய போவதாக வந்த தகவலுக்கு நடிகர் பிரபு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: என்னது... நடிகர் பிரபு காங்கிரஸ் கட்சியில் இணைய போகிறாரா?!!
சினிமாவில் அனைவரையும் ஜெயித்த சிவாஜி கணேசன் அரசியலில் தோற்று போய்விட்டார் என்று சொல்வது உண்டு. ஆரம்பத்தில் திராவிடர் இயக்கத்தின் பரிச்சயமும், பிரபலமுமான முகம்தான் சிவாஜி கணேசன்!!
திருப்பதி போய் வந்தார் சிவாஜி.. அவ்வளவுதான்... இந்நிகழ்வு பெரிய சலசலப்பை ஏற்படுத்த, 1961-ல் தன்னை இணைத்து கொண்டார் சிவாஜி. அளவுக்கு அதிகமாக நேருவையும், காமராஜரையும் விரும்பினார். பற்று வைத்த நேரு மறைந்ததும், காமராஜர்தான் தனக்கு அனைத்தும் என்றே இருந்தார். 1967ல் காமராஜ் தோற்றபோதும் சரி, 1969ல் காங்கிரஸ் 2-ஆக பிரிந்தபோதும் சரி, காமராஜரை தவிர வேறு யாருக்குமே தன் மனதில் இடம் தரவேல்லை.
சொத்துக்கள் இழப்பு?
காமராஜரின் மறைவுக்குப் பின்தான் எல்லாமே மாறியது. கருத்து வேறுபாடு கொண்டு, காங்கிரசை விட்டு வெளியே, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை தொடங்க.. 1989 சட்டமன்ற தேர்தலில் திருவையாறு தொகுதியில் நின்று தோற்று போக... இப்படியே அவரது அரசியல் நகர்ந்தது. தனது கட்சிக்காக சொத்துக்களை அதிக அளவு இழந்தவர் சிவாஜி கணேசன் என்றுகூட பேசப்பட்டது. ஆனால் இப்போது கூட தமிழக காங்கிரஸ் என்றாலே காமராஜருன் இணைந்து நம் மனக்கண் முன் வருவது சிவாஜி கணேசன்தான்!!
பாகுபாடு இல்லை
சிவாஜி இருந்தபோதும் சரி, தற்போதும் சரி.. அவரது குடும்பத்து சார்பாக யாருமே எந்த கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டதில்லை. தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவானாலும் மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே அந்த குடும்பத்துக்கு ஒன்றுதான். இந்திய அரசியல், இந்திய சினிமா என்ற உலகில் எந்தவித பாகுபாடும் காட்டாமல் சிவாஜி குடும்பம் தற்போது வரை ஒன்றுபட்டே, ஒரே குடும்பமாகவே தன்னை ஐக்கியபடுத்தி கொண்டு வருகிறது.
ராம்குமார் முயற்சி
இந்நிலையில், பிரபு காங்கிரசில் இணைகிறார் என்ற தகவல்கள் கடந்த 2 தினங்களாக தீயாக பரவி கொண்டு வருகின்றன. பிரபுவை காங்கிரசில் இணைக்க காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவர் வசந்தகுமார் பிரபு குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை அவரது அண்ணன் ராம்குமார் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் பரவின.
ராஜீவ்காந்தி
இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வர நேர்கையில் அன்னை இல்லத்துக்கு சென்று சிவாஜி கணேசனின் உருவ படத்துக்கு மாலை அணிவிக்க போகிறார் என்றும், அப்போதே பிரபுவை தனது கட்சியில் இணைத்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்களும் வந்தன. இதற்கு காரணம் கருத்து வேறுபாடே வந்தபோதும் ராஜீவ் காந்தி மீது சிவாஜி கணேசனுக்கு இருந்த அன்புதான்!!
கட்சியில் சேரவில்லை
ஆனால் இந்த தகவல்களுக்கெல்லாம் பிரபு பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. அது வெறும் வதந்திதான்..கட்சியில் இணையும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை. அப்படி யாரும் என்னைவும் அழைக்கவில்லை. ராகுல்காந்தி எங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தால், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று தெரிவித்தார்.
நிரூபித்து விட்டார்
பிரபுவை எந்த கணக்கில் காங்கிரஸில் சேர்க்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. சிவாஜியின் மகனாகவா அல்லது சமுதாயம் சார்ந்த பிரதிநிதியாகவா அல்லது வேறு எந்தக் கணக்கில் என்று தெரியவில்லை. ஆனால் சிவாஜியால் எம்ஜிஆர் ஆக முடியாது என்பதை சிவாஜியே தெளிவாக நிரூபித்து விட்டுப் போய் விட்டார். எனவே பிரபு குடும்பத்தினரும் கூட அதை உணர்ந்தே செயல்படுவார்கள் என்பதை மறுக்க இயலாது.