Exclusive: சிங்கம்பட்டி ஜமீன் எனது சொந்த பெரியப்பா... நினைவுகளை பகிரும் நடிகர் பிரேம்
சென்னை: நாட்டின் கடைசி மன்னரும், சிங்கம்பட்டி ஜமீன்தாருமான முருகதாஸ் தீர்த்தபதி அண்மையில் காலமான நிலையில் அவரை தனது பெரியப்பா என குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார் நடிகர் பிரேம்.
Recommended Video
இந்நிலையில் சிங்கம்பட்டி ஜமீனுக்கும் , நடிகர் பிரேமிற்கும் உள்ள தொடர்புகள் பற்றி அறிவதற்காக அவரை தொடர்புகொண்டோம்.
மிகவும் உற்சாகமாக பேசிய அவர் சிங்கம்பட்டி ஜமீன் தனக்கு எந்த முறையில் பெரியப்பா வேண்டும், தனது தாத்தா யார் என்பது பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். அதன் விவரம் பின்வருமாறு;
பெரியப்பா
''நாட்டின் கடைசி ராஜாவாக வாழ்த்து மறைந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி எனக்கு பெரியப்பா வேண்டும். எனது அம்மாவோடு கூட பிறந்த சகோதரியை தான் முருகதாஸ் தீர்த்தபதி திருமணம் செய்தார். இவரை பற்றி பேசுவதற்கு முன்னர் ராமநாதபுரம் மன்னர் குடும்பம் பற்றி ஒரு சிறிய வரலாற்றை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.''
தமிழில் புலமை
''ராமநாதபுரம் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மன்னருக்கு 5 மனைவிகள். அதில் 4-வது ராணி(மனைவி) கிருஷ்ணவேனி நாச்சியாருக்கு 4 பிள்ளைகள். அந்த வகையில் எனது அம்மாவும், சிங்கம்பட்டி ஜமீன் மனைவியும் அக்கா தங்கைகள். ஆக எனது பெரியம்மாவை திருமணம் செய்துள்ளதால் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி எனக்கு பெரியப்பா வேண்டும். அவரை பொறுத்தவரை ஆங்கிலம் மிக சரளமாக பேசுவார். அதேபோல் தமிழில் ஆழ்ந்த புலமையும், அறிவும் மிக்கவர்.''
கடும் கட்டுப்பாடுகள்
''புற்றுநோய் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சென்னையில் இருந்து செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் எங்களால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்ல முடியவில்லை. ஊரடங்கு தளர்த்திய பிறகு அவர் வாழ்ந்து மறைந்த சிங்கம்பட்டி அரண்மனைக்கு சென்று மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளோம்.''
5 ஏக்கரில் அரன்மனை
''ராமநாதபுரம் சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி மகன் தான் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி. அதாவது எனது அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கு சொந்த அத்தை பையன். நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் அரன்மனை இருக்கிறது. இத்தனை காலமாக எனது பெரியப்பா அங்கு தான் வாழ்ந்து வந்தார். அவருக்கு 3 பெண் 2 ஆண் என மொத்தம் 5 பிள்ளைகள்.''
அதிசய பைனாகுலர்
''எல்லோரும் இப்போது வேறு வேறு ஊர்களில் இருக்கிறார்கள். அண்ணன்கள் பிஸினஸ் செய்து வருகிறார்கள். பெரியப்பா மறைந்துவிட்டதால் இனி அரன்மனையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன். சிங்கம்பட்டி அரன்மணையில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பைனாகுலர் ஒன்று உள்ளது. அதை பார்த்தீர்கள் என்றால் இப்போது உள்ள பைனாகுலர் எல்லாம் வீண் என எண்ணக்கூடும். அந்தளவிற்கு காட்சிப்படுத்தும் திறன் கொண்டது அந்த னைனாகுலர்''
அன்பு பாராட்டுவார்
''சிங்கம்பட்டி ஜமீனை பொறுத்தவரை கலை ஆர்வம் கொண்டவர். அவரை சந்திக்கும் போதெல்லாம் என்னை வாழ்த்துவார். ஜமீன்தாரக இருந்தாலும் கூட எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டுவார்; எளிமையாக பழகுவார்.'' இவ்வாறு தனது நினைவுகளையும், குடும்ப பின்னணி குறித்தும் நடிகர் பிரேம் பகிர்ந்துகொண்டார். இதனிடையே நடிகர் பிரேம் மிகப்பெரிய பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தகவல் திரையுலகத்தினருக்கே இதுவரை தெரியாதது குறிப்பிடத்தக்கது.