அரசியலுக்குப் போன சினிமாக்காரர்கள் வரிசையில்.. ரஜினிகாந்த் இணைவாரா.. எஸ்கேப் ஆவாரா?
சென்னை: தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் என்பது பிரிக்க முடியாத ஒரு சொந்த பந்தமாகவே தொடர்ந்து வருகிறது. இந்த வரிசையில் ரஜினிகாந்த் இன்று இணைவாரா? அல்லது கிரேட் எஸ்கேப் ஆவாரா? என்பதற்கான கிளைமாக்ஸ் இன்று தெரிய வாய்ப்புள்ளது.
நாடு விடுதலை அடைந்த காலம் முதலே திராவிட இயக்கத்தின் அரசியல் வாரிசான திமுக கலைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் தொடங்கி வைத்த அத்தியாயத்தில் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என பலரும் அணிவகுத்து வந்தனர்.
திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த போது அன்றைய கட்சியின் முகங்களாக இருந்த இந்த நட்சத்திரங்களும் தவிர்க்க முடியாத தலைவர்களாகினர். திமுகவில் இருந்து தொடக்கத்தில் சிவாஜி கணேசன் வெளியேறி காங்கிரஸுக்கு போனார். நாட்டிலேயே தேர்தல் களத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் என்ற பெருமையைப் பெற்றார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
எம்ஜிஆர் - அண்ணா திமுக
திமுகவின் தேர்தல் முகங்களில் ஒன்றாக அச்சாணி போல இருந்தவர் எம்.ஜி.ஆர். அதனாலேயே அண்ணா காலத்துக்கு திமுகவின் பெருந்தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அண்ணாவுக்குப் பின்னர் கருணாநிதி, திமுக தலைமை வகித்த காலத்தில் ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது என்பது நிரூபணமானது. அண்ணா திமுக என்ற தனிக்கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார்.
ஜெயலலிதாவும் அரசியலும்
அப்போது எம்ஜிஆர் என்கிற நடிகர் கட்சி தொடங்குவதாக மட்டுமே பார்வை இருந்தது.. திண்டுக்கல் இடைத்தேர்தல் தந்த திருப்புமுனை வெற்றி தமிழ்நாட்டு சரித்திரத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டது. திமுகவின் கோட்டை கொத்தள கனவுகளுக்கு முடிவுரை எழுத வந்த கட்சியாக அண்ணா திமுக பலம் பொருந்தியதாக திகழ்ந்தது. அண்ணா திமுகவின் புகழ் வெளிச்சத்தில் பின்னாளில் ஏராளமான நட்சத்திரங்கள் வரிசை கட்டி ஐக்கியமானார்கள். அவர்களில் நடிகை ஜெயலலிதாவும் ஒருவர். ஆனால் அதிமுகவில் இணைந்த காலம்தொடங்கியே ராஜ்யசபா எம்பி, கொள்கை பரப்பு செயலாளர் பதவி என அரசியல் அரிதாரங்கள் மாறி மாறி அவர்மீது திணிக்கப்பட்டன. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னரும் கூட திணிக்கப்பட்ட இந்த அரசியல் அரிதாரங்கள் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலருக்கும் ஒவ்வாமையாக இருந்தது.
வி.என். ஜானகி அம்மாள்
எம்ஜிஆரின் கதாநாயகியாக இருந்து பின்னர் அவருடன் இல்வாழ்க்கையில் இணைந்த ஜானகி அம்மாளும் கூட எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இறக்கப்பட்டார். அவராலும் அதிமுக பிளவுபட்டதுதான் மிச்சமே தவிர வேறொன்றும் சாதிக்க முடியவில்லை. காலத்தின் கட்டாயமாக ஜெயலலிதாவின் தலைமையில் கீழ் அதிமுக எனும் மாபெரும் இயக்கம் வந்து சேர்ந்தது. 1990களுக்குப் பின்னர் ஜெயலலிதா ஒரு மக்கள் தலைவியாக உருவெடுத்தார்.
எஸ்.எஸ்.ஆர்./ சிவாஜிகணேசன்
எம்ஜிஆர் காலத்திலேயே அவருடன் முரண்பட்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்ற கட்சியை தொடங்கிப் பார்த்தார். அது கரைசேராமல் போனது. காங்கிரஸில் பெரும் செல்வாக்கோடு இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராஜீவ் காந்தியால் நிராகரிக்கப்பட்ட போது தமிழக முன்னேற்ற முன்னணி என தனிக் கட்சி கண்டார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமமும் ஆகப் பெரும் நடிகர் திலகமாக கொண்டாடிய மாமனிதர் சிவாஜிகணேசனை அரசியல் களத்தில் சொந்த தொகுதியிலேயே தோற்கடித்து புதிய சரித்திரத்தை கொடுத்தனர் தமிழக வாக்காளர்கள். இன்றளவும் நடிகர்களுக்கு சிவாஜிகணேசனின் அரசியல் தோல்வி ஒரு முன்னெச்சரிக்கை பாடமாகவே இருந்து வருகிறது.
விஜயகாந்த் தேமுதிக
எம்ஜிஆர் காலம் தொட்டே சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்துடன் கோலோச்சிய ரஜினிகாந்தின் அரசியல் வருகை பேசுபொருளாகவே இருந்து வந்தது. 1990களில் 2000களிலும் ரஜினிகாந்த் அரசியல் வருகை தலைப்புச் செய்திகளோடு நின்று போயின. ஆனால் அவருக்கு பிந்தைய கால நடிகர்களான விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கி திமுகவையே வீழ்த்தி எதிர்க்கட்சித் தலைவராகவே உயர்ந்தார். ஆனால் வளர்ந்த வேகத்தில் அப்படியே சரிந்து சாய்மானம் கண்டது விஜயகாந்த் கட்சி.
சரத்குமார் சமக
அதேபோல் நடிகர் சரத்குமாரும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். ஆனால் தமிழகத்தில் பத்தோடு பதினொன்று என்ற கணக்காக மட்டுமே சமத்துவ மக்கள் கட்சி இருக்கிறது. இந்த கணக்கில் கூட வராதது நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி. நகைச்சுவை நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை எனும் இயக்கத்தை தொடங்கி கட்சியாக்கி ஜெயலலிதாவின் ஆசியால் எம்.எல்.ஏ.வாகவே ஆகியும் விட்டார்.
சீமான் நாம் தமிழர் கட்சி
இந்த தருணத்தில் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்த இயக்குநர்/ நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் தனித்துவத்துடன் நின்று கொண்டிருக்கிறது. தமிழக தேர்தல் களத்தில் இப்போது தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி விஸ்வரூபத்துடன் இருக்கிறது.
கமல்ஹாசன்- மநீம
இதேபோல் ரஜினியின் அரசியல் வருகை பேசப்பட்ட தருணத்தில் சட்டென அரசியலுக்கு வந்துவிட்டார் சீனியர் நடிகர் கமல்ஹாசன். அவரது மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. மக்கள் நீதி மய்யமும் இப்போது நாம் தமிழருக்கு இணையாக தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய ஒரு கட்சியாக நிற்கிறது.
ரஜினியின் க்ளைமாக்ஸ் என்ன?
இந்த வரிசையில்தான் இப்போது இணைவதா? இல்லையா? என்கிற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தை தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடத்திவருகிறார் ரஜினிகாந்த். கடந்த 3 ஆண்டுகளாக ரஜினிகாந்தும் அரசியலை பேசிப் பார்த்து பல்ஸ் பார்த்து கொண்டிருக்கிறார். அவருக்கு தெரியும் சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்கப் போகிறதா? என்பது.. காத்திருப்போம் ரஜினிகாந்த் அறிவிப்பின் கிளைமாக்ஸுக்காக அவரது சினிமாவை போலவே!