தூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்
சென்னை: அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தது முதல் கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் தெரிவித்த பெரும்பாலான கருத்துகள் பெரும் சர்ச்சைகளாகி நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.
நடிகராக ரஜினிகாந்த் கோலோச்சிய காலத்திலேயே பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். 1981-ல் நடிகர் ரஜினிகாந்த், லதாவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
அந்த திருமணத்துக்கு பத்திரிகையாளர்கள் வந்தால் உதைப்பேன் என ரஜினிகாந்த் கூறியது அப்போது தலைப்பு செய்தியானது. பின்னர் அவ்வப்போது அரசியல் கருத்துகளை அபூர்வமாக தெரிவித்து வந்தார் ரஜினிகாந்த். 2017-க்குப் பிறகு பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேட்டி தந்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்
நடுத்தெருவில் பிரஸ் மீட்
பொதுவாக சென்னை விமான நிலையம் அல்லது சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டுக்கு எதிரே உள்ள நடுத்தெரு.. இந்த் இரண்டும்தான் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கும் இடமாக இருந்து வருகிறது. இப்படியான நடுத்தெரு சந்திப்புகள் கூட சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரஜினிகாந்த் கடுமையாகவே விமர்சிக்கப்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்துக்கு நீங்க யாரு என்ற பொதுமக்களின் கேள்வி கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதேவேகத்துடன் செய்தியாளர்களிடம் மிகவும் ஆவேசமாக உக்கிரமாக பேசினார். அத்துடன் சமூகவிரோதிகளே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணம் என்றார். இதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
7 தமிழர் விடுதலை
பின்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எந்த 7 பேர் என்று ரஜினிகாந்த் கேட்கப் போய் அதுவும் பெரும் பூதாகரமாக வெடித்தது. பின்னர் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார் ரஜினிகாந்த். அதே கால கட்டத்தில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தை ரஜினிகாந்த் நேரில் பார்வையிடாதது விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது.
பலசாலி பாஜக
10 பேர் சேர்ந்து ஒரு நபரை எதிர்த்தால் யார் பலசாலி என பூடகமாக பாஜக குறித்து சொல்லப் போய் பின்னர் பாஜகவை பகிரங்கமாக ஆதரித்து விளக்கம் தர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் ரஜினிகாந்த். துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு மிகப் பெரும் சர்ச்சையாகி அவரை நீதிமன்றம் வரை கொண்டு நிறுத்தியது.
தந்தை பெரியார் விவகாரம்
தந்தை பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்றார்; துக்ளக் - முரசொலி படிப்பவர்களை ஒப்பிட்டு துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்கிற கருத்தை சொன்னார். அப்புறம் என்ன தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் ருத்ரதாண்டவமாடிவிட்டன. இப்படித்தான் எதை சொன்னாலும் குழப்பமாக சொல்வது அல்லது தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராக சொல்வது அல்லது தான் சொன்னதற்கு விளக்கம் தர இன்னொரு பிரஸ் மீட் நடத்துவது என்பதுதான் ரஜினிகாந்தின் அணுகுமுறையாக இருந்து வருகிறது.