1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை
சென்னை: தமிழக அரசியல் பக்கங்களில் 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வரை ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் பற்றிய பேச்சுகள் எழாமல் இருந்தது இல்லை எனலாம்.
1991-ல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற காலத்தில் இருந்தே ரஜினிகாந்த் பெயர் அரசியல் களத்தில் தீவிரமாக அடிபட தொடங்கியது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பகுதியில் ரஜினிகாந்த் வீடும் இருந்ததால் கடும் கெடுபிடிகளுக்கு உள்ளானார்;
அண்ணாமலை பட போஸ்டர்கள் ஒட்டவிடாமல் தடுக்கப்பட்டன என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவிட்டதாக விமர்சித்தார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு?
ரஜினியின் வாய்ஸ்
அப்போது அரசியல் புயல் வீசியது. ஆர்.எம்.வீரப்பன் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனையடுத்து 1996 சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜிகே மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். இந்த கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்த கையோடு, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்கிற பேச்சின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த தேர்தலில் திமுக- தமாகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது.
1998 லோக்சபா தேர்தல்
பின்னர் 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும் திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால் அப்போது ரஜினிகாந்த் வாய்ஸ் நிராகரிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக அணி வென்றது. இதன்பின்னர் சற்று அரசியலுக்கு வாய்ஸ் கொடுப்பதை ரஜினிகாந்த் நிறுத்தினார்.
பாபாவும் பாமகவும்
2002-ம் ஆண்டு பாபா படத்தை முன்வைத்து பாமகவினருடன் ரஜினிகாந்த் தரப்புக்கு கடும் மோதல் ஏற்பட்டது. பெங்களூருவில் கன்னட நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் ரஜினி பேசிய பேச்சுகள் தமிழகத்துக்கு எதிராக இருந்தது; இதனால் பாமக அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வடதமிழகத்தில் பாபா திரைப்படம் ஓடமுடியாத நிலை இருந்தது. பாபா படப்பெட்டிகள் முந்திரி காடுகளுக்குள் தூக்கி செல்லப்பட்டன; பாபா படம் வெளியிட்ட மேலாளர் கடத்தப்பட்டார் என பரபரப்பு நிலவிய காலம் அது.
நதிநீர் இணைப்பு
2002-ம் ஆண்டில் காவிரி நதிநீர் பிரசனை நதிகள் இணைப்பு தீவிரமாக பேசப்பட்டது. காவிரி நதிநீர் பிரச்சனைக்காக ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தாம் ரூ1 கோடி தர தயார் என கூறியிருந்தார் ரஜினிகாந்த். மேலும் இதற்கான மக்கள் இயக்கத்தை முன்னெடுகக் இருப்பதாகவும் அப்போது கூறினார் ரஜினிகாந்த். இன்றளவும் இந்த ரூ1 கோடி விவகாரம் விவசாய அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேஜகூவுக்கு ஆதரவு
2004-ம் ஆண்டு பாமகவுக்கு எதிராக ரசிகர்கள் வாக்களிக்க உத்தரவே இட்டார் ரஜினிகாந்த். ஆனால் ரஜினிகாந்த் கொடுத்த அந்த வாய்ஸ்-ம் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதேபோல் நதிகள் இணைப்பை முன்வைத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துபார்த்தார் ரஜினிகாந்த். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. பின்னர் 2008-ல் அரசியல் நுழைவு குறித்த கேள்விக்கு, நேரம் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என கூறியிருந்தார் ரஜினிகாந்த்.
ரஜினி வீட்டில் நரேந்திர மோடி
2014 லோக்சபா தேர்தலின் போது ரஜினிகாந்த் வீட்டுக்கே பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி நேரில் சென்றார். அப்போது மோடி சிறந்த தலைவர், நிர்வாகி.. அவர் நினைத்தது வெற்றியடைய வாழ்த்தியதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். 2014-ல் சொத்து குவிப்பு வழக்கில் 20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜெயலலிதா விடுதலையாகி திரும்பிய போது மகிழ்ச்சி என கூறி வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த். 2017 டிசம்பர் 31-ல் தாம் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த கையோடு அப்போது கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றார் ரஜினிகாந்த்.
யாருக்கும் ஆதரவு இல்லை
2019 லோக்சபா தேர்தலில் தமது மக்கள் மன்றம் போட்டியிடாது; எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை; 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு எம்ஜிஆரைப் போல நல்லாட்சி தருவோம் என கூறினார் ரஜினிகாந்த்.