சும்மா கிடந்த மு.க.அழகிரி.. ஊதிக் கெடுத்த "போயஸ்".. "ஓ.எஸ்". பாத்துக்கலாம்.. திமுக கெத்து!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் மு.க. அழகிரியின் திடீர் மறுபிரவேசத்தின் பின்னணியில் நடிகர் ரஜினிகாந்த் இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. அவரும் வர மாட்டார்.. படாதபாடு பட்டு போங்கடான்னு ஒதுங்கிக் கிடப்பவரை இப்படி தூண்டி விடறாரே என்று நக்கல் சிரிப்புகள் அரசியல் வட்டாரத்தில் உலா வருகின்றனவாம்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார்; அவரை வைத்து திராவிட கட்சிகளுக்கு குறிப்பாக திமுகவுக்கு வேட்டு வைத்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் திட்டமாக இருந்தது. இதற்கு ஏற்ப ரஜினிகாந்தும் பாஜக போலவே வாய்ஸ் கொடுத்துப் பார்த்தார். ஆனால் ரஜினிகாந்தின் ஒவ்வொரு கருத்துக்கும் தமிழகமே ஒட்டுமொத்தமாக திரண்டு நின்று எதிர்த்தது. இதனால் பயந்து போய் அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் ஜகா வாங்க தொடங்கினார் ரஜினிகாந்த்.
பின்னர் கொரோனாவை முன்வைத்து இப்போதைக்கு கட்சி தொடங்கும் ஐடியாவே இல்லை என்பதை மறைமுகமாக பிரகடனம் செய்துவிட்டார் ரஜினிகாந்த். இதனால், ரஜினிகாந்துடன் மு.க. அழகிரி சேர்ந்து நின்றால் திமுகவின் ஆட்சி கனவை பனால் ஆக்கிவிடலாம் என்ற பாஜகவின் கனவுக்கு பெரும் ஏமாற்றமாகிப் போனது. இந்த நிலையில்தான் மீண்டும் மு.க.அழகிரி ஊடகங்களில் அடிபட்டு வருகிறார்.. அதாவது வம்படியாக அவரை தூக்கி வைத்து பேச ஆரம்பித்துள்ளனர்.
அழகிரியை தள்ளிவிட்ட ரஜினிகாந்த்
பாஜக மற்றும் மு.க. அழகிரியை வைத்து திரும்பிய திசை எங்கும் பேச்சுகள்.. பேட்டிகள்தான்.. மு.க. அழகிரி வரப் போறார்.. கட்சி ஆரம்பிக்கப் போறார்.. அதை செய்யப் போறார் இதை செய்யப் போறார் என பரபரப்புகள்.. அவரது திடீர் ரீ எண்ட்ரிக்கு காரணமே நடிகர் ரஜினிகாந்த்தான் என இப்போது கை நீட்டுகின்றன மதுரை வட்டாரங்கள்.
அழகிரியின் 2-வது இன்னிங்ஸ்
அண்மையில் ரஜினிகாந்துடன் தொலைபேசியில் பேசிய அழகிரி கள நிலவரங்கள் குறித்து விவாதித்திருக்கிறார். அப்போது தமக்கு இருக்கும் சில நெருக்கடிகளை ரஜினி கோடிட்டு காட்டியிருக்கிறார். திமுக தரப்பு தமது அரசியல் வருகையை விரும்பவில்லை என்பதையும் ரஜினி குறிப்பிட்டிருக்கிறார். இந்த உரையாடலுக்குப் பின்னர்தான் அழகிரி ஆவேசமானாராம். அதாவது ரஜினிகாந்தை வேண்டுமானால் உங்களால் தடுக்க முடியும்? என்னை தடுக்க முடிந்தால் தடுத்து பாருங்க? என்கிற கோதாவில்தான் 2-வது இன்னிங்ஸை அழகிரி ஆடத் தொடங்கியிருக்கிறாராம்.
அசால்ட் திமுக
திமுகவை பொறுத்தவரை படு தெளிவாக இருக்கிறது.. புதுக் கட்சியா, பழைய பார்ட்டியோ.. யாராக இருந்தாலும் சரி.. நம்ம செல்வாக்கு சரிந்து விடக் கூடாது.. பக்காவாக அதில் இருக்க வேண்டும் என்று படு தெளிவாக இருந்து வருகிறது. ரஜினி குறித்து கவலை கொண்ட திமுக, அழகிரியின் ஆட்டத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி வருகிறது. காரணம், அழகிரியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம்தான்.
மக்கள் தெளிவான வாக்களிப்பு
முன்பு வைகோ பிரிந்தபோது, திமுகவில் செங்குத்து பிளவு என்றெல்லாம் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கின. இத்தனைக்கும் திமுகவின் ஆகப் பெருந்தலைகளே கூட வைகோ பின்னால் போனார்கள்.. திமுக தொண்டர்கள் தீக்குளித்து மாண்டுபோனார்கள்.. அறிவாலயம், கட்சி கொடி என அத்தனைக்கும் பிரச்சனை வந்தது. 1996 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு முடிவுரை எழுதிவிடலாம் என்ற முனைப்போடு பல பத்திரிகை ஜாம்பவான்கள் காத்திருந்தார்கள். ஆனால் வைகோவுக்கு ஓட்டுப் போட்டு என்ன பிரயோஜனம்? அவரா ஆட்சிக்கு வரப் போகிறாரா? ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ள கட்சிக்குத்தானே ஓட போடனும்? என்கிற அரசியல் தெளிவுடன் தமிழக மக்கள் வாக்களித்தார்கள்.. அதாவது திமுக தலைவர் கருணாநிதி அப்போது காட்டிய நிதானம், பொறுமை, சமயோஜிதம் காரணமாக யாரும் மதிமுகவை நம்பவில்லை, நம்பிப் போகவில்லை. நெருப்பு சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாக விஸ்வரூபத்துடன் திமுக மீண்டும் அரியாசனம் ஏறியது.
திமுகவின் திட நம்பிக்கை
பிரளயத்தை காட்டிய வைகோவாலேயே திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்பதை தமிழக வாக்காளர்கள் பிரகடனப்படுத்திய வரலாறு இருக்கிறது. ஆகையால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு காணாமல் போய் எடுப்பார் கைப்பிள்ளையாக அரசியலில் திணிக்கப்பட்டால்.. மு.க. அழகிரியால்.. திமுக வெற்றியில் ஒரு துரும்பைக் கூட அசைத்துவிட முடியாது என்பது திமுகவினரின் நம்பிக்கை.
அழகிரி உணருவாரா?
புதுக் கட்சியே கூட அழகிரி தொடங்கினாலும் கூட தற்போதைய சூழலில் அவரால் பெரிய அளவில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பது உறுதி. இதை ரஜினி உணர்ந்து கொண்டதால்தான் அவர் ஒதுங்கிப் போகிறார்.. அழகிரியும் அதை உணர்வார் என்று திமுக தரப்பு தெளிவாக கூறிக் கொண்டிருக்கிறது.